போங்க..போய் டாஸ்மாக்கை சுத்தம் செய்யுங்க! போதையில் விபத்தை ஏற்படுத்தியவருக்கு நீதிமன்றம் உத்தரவு
அடுத்த உத்தரவு வரும்வரை குறுக்குத்துறை டாஸ்மாக் கடையை தினமும் சுத்தம் செய்ய நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி: திருநெல்வேலியில் குடிபோதையில் டூவீலர் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பைக்கில் சென்றவர் படுகாயமடைந்தார். இந்நிலையில் போதையில் விபத்தை ஏற்படுத்தியதாக டூவீலர் ஓட்டி வந்த தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். இந்நிலையில் தான் தினமும் டாஸ்மாக் கடையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் போதையில் டூவீலர் ஓட்டிய நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தமிழ்நாடு உள்பட இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் அவ்வப்போது வித்தியாசமான உத்தரவுகளை வழங்குவது வாடிக்கையாக உள்ளன. பெரும்பாலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் செலுத்தும் அபராத தொகை அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிமன்றம் கூறும். இல்லாவிட்டால் பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி, பேரிடர் நிவாரண நிதி உள்ளிட்டவற்றுக்கு குற்றவாளிகளின் அபராத தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டு இருப்பதை நாம் பார்த்து இருப்போம்.
மேலும் சீமை கருவேலை மரங்களை வெட்டி அகற்றவும், போக்குவரத்து போலீசாருக்கு உதவ வேண்டும். போக்குவரத்து விதிகளை மக்கள் அனைவரும் மதிக்க வேண்டும் என முக்கிய சந்திப்புகளில் நின்று துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும் என்ற பல உத்தரவுகள் அவ்வப்போது கவனம் ஈர்த்துள்ளன. அந்த வரிசையில் தற்போது திருநெல்வேலி நீதிமன்றத்தின் உத்தரவு கவனம் பெற்றுள்ளது. அதன் விபரம் வருமாறு:

கூலி தொழிலாளி
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்தவர் நீர்காத்தலிங்கம் (வயது 28). கூலி தொழிலாளி. இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 12ம் தேதி நீர்காத்தலிங்கம் டூவீலரில் வீட்டில் இருந்து புறப்பட்டார். டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தார்.

போதையில் விபத்து
இந்த வேளையில் திடீரென்று அவரது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர், இன்னொரு பைக் மீது மோதியது. இந்த விபத்தில் எதிரே பைக்கில் வந்த நபர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நீர்காத்தலிங்கம் குடிபோதையில் டூவீலர் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு
இதையடுத்து நீர்காத்தலிங்கத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 23 நாள் அவர் சிறையில் இருந்தார். இந்நிலையில் தான் நீர்காத்தலிங்கம் ஜாமீன் கோரி திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனுவை பொறுப்பு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் விசாரித்தார்.

டாஸ்மாக்கை சுத்தம் செய்ய...
நேற்று நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது நீர்காத்தலிங்கத்துக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார். ரூ.10 ஆயிரம் பாண்ட் வழங்கவும், அடுத்த உத்தரவு வரும்வரை திருநெல்வேலி குறுக்குத்துறை டாஸ்மாக் கடையை தினமும் சத்தம் செய்யவும் நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் நிபந்தனைகள் விதித்தார்.












Click it and Unblock the Notifications