திருநெல்வேலியில் காதல் கணவனை சேலையால் கழுத்தை திருகிய சுதா.. நீதிமன்றம் கொடுத்த பெரிய தண்டனை
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பை ஊர்க்காடு நடு தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரும், சுதா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சுதாவுக்கு வேறு ஒருவருடன் தவறான பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்த பேச்சுமுத்துவை, காதல் கணவன் என்று கூட பார்க்காமல் செய்த செயலால், இனி ஆயுசுக்கும் சிறையில் தான் இருக்க போகிறார் சுதா.. ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பை ஊர்க்காடு நடு தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருடைய மகன் பேச்சிமுத்து (வயது 30). கூலி தொழிலாளியாவார். இவர் 28 வயதாகும் சுதா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் தவறான பழக்கம் வாழ்க்கையையே திசைமாற்றியுள்ளது.

பேச்சிமுத்துவின் மனைவி சுதாவுக்கு வேறு ஒருவருடன் தவறான பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ஒருக்கட்டத்தில் அறிந்து கொண்ட பேச்சிமுத்து தனது மனைவி சுதாவைக் கண்டித்தாராம். இதனால் சுதா மற்றும் பேச்சிமுத்து இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுதா கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருக்கிறாராம்.
இதனிடையே கடந்த 2.2.2022 அன்று இரவில் வழக்கம்போல் பேச்சிமுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது சுதா சேலையால் பேச்சிமுத்துவின் கழுத்தை இறுக்கினார். இதில் அந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மறுநாள் காலையில் சுதா தனது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறி இறுதி சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதுதொடர்பாக சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து அம்பை போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். இதில் சுதா தனது கணவரை கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்து விட்டு மாரடைப்பால் இறந்ததாக கூறி நாடகமாடியது தெரிய வந்தது. எனவே. சுதாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சூரசங்கரவேல் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், குற்றம் சாட்டப்பட்ட சுதாவுக்கு கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், தடயங்களை மறைத்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தவறான சகவாசத்தால் வாழ்க்கை முழுவதையும் இனி சுதா சிறையில் தான் கழிக்க போகிறார்.












Click it and Unblock the Notifications