நெல்லை அய்யா வைகுண்டர் கோவிலில் பரபரப்பு.. போலீசார் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு.. நடந்தது என்ன?
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை அய்யா வைகுண்டர் கோவிலில் அனுமதி இன்றி அன்னதானம் வழங்க பக்தர்கள் ஏற்பாடு செய்ததால், அதனை போலீசார் தடுத்தனர். இதில் போலீசார் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பாக 16க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அய்யா வழி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் சொக்கலிங்க சுவாமி கோவில் மற்றும் அய்யா வைகுண்டர் தர்மபதி கோவிலில் இன்று அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.

அய்யா வைகுண்டர் அவதார விழா
இந்த கோவிலில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பு இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வருகிறது. வழிபாடு நடத்துவதற்கு உரிய அனுமதி பெறப்பட்டு விழாக்கள் நடந்து வருகின்றன. அதன்படி இன்று வழிபாடு நடுத்துவதற்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு தரப்பினர் இன்று வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்க அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதற்காக நேற்று இரவு அங்கு வந்த எதிர் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதனால் அங்கு வந்த போலீசார் வழிபாடு நடத்துவதற்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்க அனுமதி இல்லை என்று கட்டுபாடுகளை விதித்தனர். இந்த கட்டுப்பாடுகளை கண்டித்து, நேற்று இரவு அய்யா வழி பக்தர்கள் போராட்டம் செய்தனர். அப்போது போலீசார் சமாதானம் செய்து அவர்களை கலைந்து போக செய்தனர்.
பக்தர்கள் போலீசார் இடையே தள்ளுமுள்ளு
இந்த நிலையில் இன்று அன்னதானம் போடுவதற்காக ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், அங்கு வந்த போலீசார் சமையல் செய்வதை தடுத்து, பாத்திரங்களை அப்புறப்படுத்தினர். இதனால் அய்யா வழி பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே நேரத்தில் இன்று அந்த கோவிலில் சப்பர பவனி நடந்து வந்தது. போலீசார் அன்னதானத்தை தடுத்து நிறுத்தியதால், சப்பர பவனியை நிறுத்திவிட்டு அய்யா வழி பக்தர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலைமறியலை கைவிடாததால், போலீசார் அவர்களை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் போலீசார் தாக்கியதில் காயமடைந்ததாக நெல்லை ஐக்கிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:-
போலீசார் விளக்கம்
திருநெல்வேலி மாநகர காவல் துறை பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் வராத சொக்கலிங்கசாமி கோவில் தெருவில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் வளாகத்தில் சமையல் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கு உள்ள பிரச்சனை தொடர்பாக வருவாய் கோட்டாச்சியர் அவர்களின் தலைமையில் விசாரணை நடைபெற்று அதன் தொடர்ச்சியாக உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு கடந்த 21.02.2025 தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை இருதரப்பும் ஏற்று எழுத்துப்பூர்வமாக ஒப்புகை கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று 04.03.2025ஆம் தேதி உரிமையியல் பிரச்சனை உள்ள இடத்தில் நீதிமன்றத்தை அனுகாமல், ஒரு தரப்பினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உள்நுழைந்து அடுப்பினை தீ மூட்ட முற்பட்டுள்ளனர். இதற்கு எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் இதனை முறையாக திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை காவல் துறையினர் தடுத்து உரிய சிவில் நீதிமன்றத்தில் நிவாரணம் தேட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் நடவடிக்கை கண்ணியமாகவும், நடுநிலைமையுடனும் கையாளப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தற்சமயம் இரு தரப்பும் அமைதியான முறையில் வழிபாட்டை சிறப்பாக தொடர்கிறார்கள். இந்நிலையில் சமூக வலைதளங்களில் காவல்துறை அராஜகம் எனவும், அன்னதானம் நிறுத்தப்பட்டது போல தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications