ஜெயக்குமார் உடல் எரிக்கப்பட்ட இடத்தில் டார்ச் லைட்டை கண்டுபிடிக்க 1 வாரம் ஆனது ஏன்? ஐ.ஜி பரபர பதில்!
நெல்லை: ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் முக்கிய ஆதாரமான டார்ச் லைட் 1 வாரத்திற்கு பிறகே கண்டுபிடிக்கப்பட்டது ஏன் என்பது பற்றி தென் மண்டல ஐ.ஜி கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்ம மரணம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஜெயக்குமார் மர்ம மரணம் குறித்து போலீசார் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையா? தற்கொலையா? என்பதை உறுதி செய்யவும், சம்பந்தப்பட்டவர்களை பிடிக்கவும் ஜெயக்குமார் எழுதி வைத்த கடிதம் தொடங்கி, சிசிடிவி ஆதாரங்கள் என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தென் மண்டல ஐஜி கண்ணன், ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பான விசாரணை பற்றி பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார்.
ஐ.ஜி கண்ணன் பேசுகையில், "சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கையில், உடலின் எந்தெந்த பாகங்கள் எரிந்துள்ளது என சொல்லப்பட்டிருக்கிறது. காயங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இறந்த உடலை எரித்ததாக எந்த தகவலும் இல்லை. உடர்கூராய்வு நிபுணர்களின் இறுதி கருத்து இன்னும் கிடைக்கவில்லை.
கிடைத்த கடிதம் ஜெயக்குமார் தனசிங் எழுதியது தான் என அவரது உறவினர்கள் சொல்கின்றனர். ஆனால், கையெழுத்து நிபுணர்களின் முடிவை பெற்றுத்தான் அதனை உறுதி செய்ய முடியும். கையெழுத்து நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. டி.என்.ஏ சோதனை உள்ளிட்ட பல அறிக்கைகள் கிடைக்க வேண்டியுள்ளது." எனத் தெரிவித்தார்.
உடல் கண்டெடுக்கப்பட்டு 1 வாரத்திற்குப் பிறகு டார்ச் லைட் அப்பகுதியில் கிடைத்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஐ.ஜி கண்ணன், "உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் பள்ளமான இடம். தடயவியல் நிபுணர்கள் ஒவ்வொரு அடுக்காகத்தான் ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்து எடுப்பார்கள். அப்படி, தடயவியல் ஆய்வின் ஒரு லேயரில் டார்ச் லைட் கண்டெடுக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.
மேலும், "ராமஜெயம் வழக்கு, முதலிலேயே கொலை என முடிவு செய்ய முடிந்தது. இந்த வழக்கில் அதுபோன்று காயம் எதுவும் தென்படாததால் கொலை என முடிவு செய்ய முடியவில்லை. பணம் தொடர்பான பிரச்சனை, அரசியல் தொடர்பான பிரச்சனைகள் என பல உள்ளன. விசாரணைக்குப் பிறகு தெரியப்படுத்தப்படும்.
ஜெயக்குமார் தனசிங் எழுதியாக 2 கடிதங்கள் கிடைத்தன. அவை அவர் கையெழுத்துதான் என அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். கையெழுத்து நிபுணர்களின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 32 பேரையும் அழைத்து விசாரித்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகிறோம்." என்றார்.
ஜெயக்குமார் கடிதத்தில் சபாநாயகர் அப்பாவு பெயரும் இடம்பெற்றிருந்த நிலையில், அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஐ.ஜி கண்ணன், "அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. சபாநாயகர் பெயரும் இடம்பெற்றுள்ளது என்றால் தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும். கூடிய விரைவில் இந்த வழக்கில் முடிவு கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் இறப்புக்கு முன்பாக ஒரு கடையில் டார்ச் லைட் வாங்கியது சிசிடிவி காட்சி மூலமாக தெரியவந்தது. ஜெயக்குமார் எந்த பதற்றமும் இன்றி டார்ச் லைட் வாங்கிச் சென்றதாக போலீஸ் விசாரணையில் கடை உரிமையாளர் தெரிவித்திருந்தார். இதனால், ஜெயக்குமார் கடைசியாக அந்த டார்ச் லைட் எங்கே என தேடப்பட்டு வந்தது குறிப்பிடதக்கது. அந்த டார்ச் லைட் தான் சம்பவ இடத்தில் 8 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications