“என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல” சிறுமியிடம் கலகலப்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்! க்யூட் ரியாக்ஷன்!
திருவள்ளூர்: அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் குழந்தைகளிடம் கலகலப்பாக உரையாடினார்.
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இன்று முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் இந்த மகத்தான திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளார்.

1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் 14,40,351 பேர் சத்தான காலை உணவு சாப்பிட்டு பயனடைந்து வரும் நிலையில் இன்று முதல் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்களும் கூடுதலாக பயனடையத் தொடங்கியுள்ளனர்.
சாப்பாடு ஊட்டிய முதல்வர் ஸ்டாலின்: இன்று மாணவ மாணவிகளுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி, அவர்களுக்கு ஊட்டிவிட்டதோடு, மாணவச் செல்வங்களுடனே அமர்ந்து சாப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது சாப்பாடு எப்படி இருக்கிறது என்றும் அக்கறையோடு விசாரித்தார்.
மாணவ மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்ட ஸ்டாலின், தனக்கு அருகில் அமர்ந்திருந்த மாணவிகளிடம் அவர்களின் பெயர், விவரங்களை கேட்டறிந்தார். சாப்பாட்டை எடுத்து அவர்களுக்கு ஊட்டிவிட்டு, சாப்பாடு நல்லா இருக்கா? எனக் கேட்டு, அவர்களை நன்றாகச் சாப்பிடும்படி அறிவுறுத்தினார்.
தாத்தா இல்ல: மேலும், "என் பேரு என்ன தெரியுமா?" என அருகில் அமர்ந்திருந்த மாணவியிடம் கேட்டார். அதற்கு அந்தச் சிறுமி, "ஸ்டாலின் தாத்தா" எனக் கூற, அதற்கு சிரித்தபடியே, "தாத்தா இல்ல.. ஸ்டாலின் தான்" எனக் கூறினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "இன்று மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன். என் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கேட்டால், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் உங்களுடைய முன்னேற்றத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஒரு முதலமைச்சராக இருந்து உங்களுக்காக பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த மகிழ்ச்சியை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களுக்கு முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசியை போக்க முடிவு செய்து காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது." எனத் தெரிவித்தார்.
மேலும், காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை CM Dash Board வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications