திமுக ஒன்றியச் சேர்மனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய எடப்பாடி! அமைச்சர் நாசர் மாவட்டத்தில் ஒரு விக்கெட்!
திமுக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எடப்பாடி தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்தார்.
திருவள்ளூர்: பால்வளத்துறை அமைச்சர் நாசரின் சொந்த மாவட்டமான திருவள்ளூரில் திமுக ஒன்றியச் சேர்மனை அதிமுக பக்கம் இழுத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
திருத்தணி திமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரனுக்கும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தங்கதனத்துக்கும் இடையே பல மாதங்களாக முட்டல் மோதல் இருந்து வந்தது.
இதனை மாவட்ட அமைச்சரான நாசர் இருவரையும் அழைத்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டு சமாதானம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இணைப்பு படலம் நடந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
''என்னை என்ன பழைய பழனிசாமின்னு நினைச்சீங்களா'' என சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான அர்த்தத்தை இப்போது மெல்ல வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளார். கூட்டணிக் கட்சியான பாஜகவிலிருந்தே மாநில நிர்வாகிகளை தட்டி தூக்கியது, ஆளுங்கட்சியான திமுகவிலிருந்து ஒன்றியச் சேர்மனை அதிமுகவில் இணைத்தது என தனது அரசியல் ஆடு புலி ஆட்டத்தை அரங்கேற்றி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி திமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரனுக்கும், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தங்கதனத்துக்கும் இடையே பல மாதங்களாக பஞ்சாயத்து போய் கொண்டிருக்கிறது. தன்னை ராஜினாமா செய்யச் சொல்லி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மிரட்டுவதாகவும் ராஜினாமா செய்யவிட்டால் பல லட்சங்கள் பணம் கேட்பதாகவும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தங்கதனம் பரபரப்பு புகார் ஒன்றை சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

அதிமுகவில் இணைப்பு
அப்போதே சுதாரித்துக் கொண்டு திருவள்ளூர் மாவட்ட அமைச்சரான ஆவடி நாசர் அவர்கள் இருவரையும் அழைத்துப் பேசி பிரச்சனையை தீர்த்து வைத்திருந்தால், இன்று திமுகவை உதறிவிட்டு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தங்கதனம் அதிமுகவுக்கு சென்றிருக்க மாட்டார். திமுகவில் தங்கதனம் கடும் அதிருப்தியில் இருப்பதை அறிந்த அதிமுக லோக்கல் புள்ளி திருத்தணி அரி, பக்காவாக காய் நகர்த்தி தங்கத் தனத்தை எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே அதிமுகவில் இணைய வைத்துவிட்டார்.

பரபரப்பு நடவடிக்கை
இதுமட்டுமல்ல அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்தது முதல் அமமுக, திமுக, உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரை அதிமுகவில் இணைப்பதற்கான நடவடிக்கைகளை பரபரப்பாக முன்னெடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications