அண்ணல் அம்பேத்கர் சிலை சேதம்.. முகம், ஆட்காட்டி விரலை உடைத்த மர்ம நபர்கள்.. பொன்னேரியில் பரபரப்பு!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கரின் முகம், கை மற்றும் ஆட்காட்டி விரலை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். பின்னர் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பியாகவும் இருந்தவர். அவர் இந்தியாவில் உள்ள சட்ட நிறுவனங்களில் ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளார். இதனால் அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அம்பேத்கர் சிலை மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையின் முகம், கையை மர்மநபர்கள் இன்று அதிகாலை சேதப்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக அம்பேத்கரின் சிலையில் உள்ள ஆட்காட்டி விரலை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அதிகாலையில் அம்பேத்கர் சிலை சேதமடைந்ததையறிந்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார், சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலையை துணியால் மூடினர்.
இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கிராமத்தில் எங்கேயாவது சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய விவகாரம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications