கொடுமை.. கொதிக்கும் வெந்நீரில் விழுந்து.. துடித்த பிஞ்சு.. ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்
திருவள்ளூர்: கொதிக்கும் வெந்நீரில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை நடமாடும் இடத்தில் மிகவும் அலட்சியமாக வெந்நீரை வைத்துச் சென்றதே இந்த சம்பவத்துக்கு காரணம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோரிடத்தில் அதிகரிக்கும் அலட்சியம்..
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வீட்டில் நிகழும் விபத்துகளில் சிக்கி குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. உதாரணமாக, கடந்த ஜூன் மாதம் தாம்பரத்தில் 2 வயது குழந்தை ஒன்று கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது; இரண்டு வாரங்களுக்கு முன்பு போரூரில் வீட்டின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது; இரு தினங்களுக்கு முன்பு கூட அம்பத்தூரில் மீன் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை இறந்தது. இந்த சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க பெற்றோரின் அலட்சியத்தாலேயே நிகழ்ந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பெற்றோர்கள் செல்போனில் மூழ்கிக் கிடப்பதும் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அப்படியொரு கொடுமையான சம்பவம்தான் திருவள்ளூரில் நடந்திருக்கிறது.

குழந்தையை குளிப்பாட்ட..
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்த தாமரைக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரசாக். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு அஜ்மீர் என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இதனிடையே, கடந்த 10-ம் தேதி காலை வழக்கம் போல ரசாக் வேலைக்கு சென்றுவிட்டார். ரசாக்கின் மனைவியும், குழந்தை அஜ்மீரும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது குழந்தையை குளிப்பாட்டுவதற்காக ரசாக்கின் மனைவி பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துள்ளார்.

குழந்தைக்கு அருகிலேயே..
இந்நிலையில், வெந்நீர் நன்றாக கொதித்ததற்கு பின்னர், அந்த பாத்திரத்தை, குழந்தை விளையாடிக் கொண்டிருந்த அறையிலேயே ரசாக்கின் மனைவி வைத்துள்ளார். அப்போது திடீரென மழை பெய்ததால் மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க அவர் சென்றுவிட்டார். அந்த சமயத்தில், ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அஜ்மீர் அந்த வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்தது.

பரிதாபம்..
கொதிக்கும் தண்ணீரில் விழுந்ததால் குழந்தை அஜ்மீர் வலியில் அலறி துடித்துள்ளான். ஆனால், வீட்டில் யாரும் இல்லாததால் உடனடியாக குழந்தையை மீட்க முடியவில்லை. பின்னர் குழந்தையின் அழுகுரலை கேட்டு தாய் ஓடி வந்த போது, குழந்தை உடல் முழுவதும் வெந்த நிலையில், மயங்கிக் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி குழந்தை அஜ்மீர் நேற்று உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications