இளைஞர் + அக்கா, தம்பி.. மின்னல் வேக சேசிங்கில் போலீசார்.. கப்பென்று சிக்கிய கஞ்சா ஆசாமி!
பொன்னேரி: லிப்ட் தருவதாக கூறி அக்கா, தம்பியை பைக்கில் வைத்து கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளதுடன், கடத்தப்பட்ட சிறுவர்களையும் மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, அக்கரம்பேடு பகுதியை சேர்ந்த வீரன் என்பவருக்கு 11 வயதில் ஒரு மகன், 12 வயதில் ஒரு மகள் உள்ளனர். இருவரும் அனுப்பம்பட்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். வழக்கம்போல் இவர்கள் நேற்று பள்ளிக்கு அவ்வழியாக நடந்து சென்றனர்.

அப்போது, பைக்கில் ஒரு இளைஞர் வரவும், இருவரும் அவரிடம் லிப்ட் கேட்டுள்ளனர். அந்த இளைஞரும் அக்கா, தம்பி இருவரையும் பைக்கில் ஏற்றி கொண்டார். ஆனால் ஸ்கூலில் இருவரையும் இறக்கி விடாமல், பள்ளியை கடந்து சென்றார். மேலும் அக்கா, தம்பி இருவரும், இளைஞர் ஒருவருடன், மேட்டுப்பாளையம் வழியாக பைக்கில் சென்றதை பார்த்ததாக, ஆசிரியர்களிடம், அந்த பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனால் பதறிப்போன ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் அளிக்க.. பெற்றோரும் போலீசாருக்கு தகவல் அளிக்க... விரைந்து விசாரணை நடத்தப்பட்டது. மீஞ்சூர் போலீசார், சம்பவ இடத்திற்கே சென்றுவிட்டனர். மேட்டுப்பாளையம், எலவம்பேடு பகுதிகளில் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் வாகன சோதனையும் மேற்கொண்டனர். அப்போது, மதியம் 12:00 மணிக்கு எலவம்பேடு அருகே, பைக்கில் அக்கா, தம்பியை உட்கார வைத்து இளைஞர் வந்து கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து பிள்ளைகளை மீட்ட போலீசார், இளைஞரை கைது செய்து விசாரித்தனர். பெயர் சுகுமார் என்பதும் வயது 25 என்பதும் தெரியவந்தது. அது மட்டுமில்லை.. இளைஞர் கஞ்சா போதையில் இருந்தார்.
பிள்ளைகளை உண்மையிலேயே கடத்தும் நோக்கில் இளைஞர் லிப்ட் கொடுத்து சுற்றி வந்தாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. ஆனால் கடத்தப்பட்ட வெறும் 3 மணி நேரத்துக்குள்ளேயே போலீசார் கஞ்சா இளைஞனை பிடித்து, பிள்ளைகளையும் மீட்டுள்ளது பொதுமக்களிடயே பாராட்டை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications