அரசியல்வாதி அவதாரத்தில் எ.வ.வே.கம்பன்... கலசபாக்கம் தொகுதியை குறிவைக்கிறாரா எ.வ.வேலு மகன்?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தனது மகன் கம்பனை அரசியலில் தீவிரமாக களமிறக்கியிருப்பது தான் அந்த மாவட்ட உடன்பிறப்புகளுடையே பேசு பொருளாக உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் நெருக்கமான வட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளில் எ.வ.வேலுவும் ஒருவர்.
கட்சிக்கு பொருளாதார ரீதியாக பக்கபலமாக இருப்பவர் என்பதால் கருணாநிதி காலம் முதலே இவரது செல்வாக்கு கொடிகட்டி பறக்கிறது.
அதிமுக முத்திரை
பேராசிரியர் அன்பழகன் மறைவை அடுத்து அவர் வகித்து வரும் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவதால் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்நிலையில் பொருளாளர் பதவியை கைப்பற்ற எ.வ.வேலு தீவிர முயற்சியை முன்னெடுத்து வருகிறார். ஆனால் அவருக்கு இருக்கும் ஒரு மைனஸ் என்னவென்றால் அதிமுகவில் இருந்து வந்தவர் என்ற முத்திரை. இதை காரணமாக கூறி எ.வ.வேலுவுக்கு பொருளாளர் பதவி கிடைக்காத வகையில் அறிவாலயத்தில் ஒரு லாபி நடக்கிறது.
துணை பொதுச்செயலாளர்
இதனிடையே சீனியர் நிர்வாகியும், முன்னாள் முதன்மைச் செயலாளருமான டி.ஆர்.பாலு பெயரை பொருளாளர் பதவிக்கு ஸ்டாலின் டிக் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொருளாளர் பதவி கிடைக்காவிட்டாலும் துணை பொதுச்செயலாளர் பதவியையாவது பிடித்து தலைவருடன் மேடையில் ஒரே வரிசையில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் எ.வ.வேலு. இந்நிலையில் இதற்கு மேலும் பொறுப்பான் ஏன் என எண்ணி தனது மகன் கம்பனை அரசியலில் அவதாரமெடுக்க வைத்துள்ளார்.
முதல் ஆளாக
திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா ரெசிடென்சியல் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கவனித்து வந்த கம்பன், தற்போது முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார். கட்சியில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாத நிலையில் கூட கலசபாக்கம் தொகுதியை அதிகமாக சுற்றிவருகிறார். அந்த தொகுதி மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக கம்பன் ஆஜராகிறார். இப்போது கூட ஜவ்வாதுமலையை சேர்ந்த தொழிலாளர்கள் கேரளாவில் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
பாதுகாப்பு உபகரணங்கள்
கலசபாக்கம் தொகுதிகுட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு விசிட் அடிக்கும் அவர் முககவசம், சானிடைஸர், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறார். மக்கள் பிரதிநிதியான அண்ணாதுரை எம்.பி. கைப்பட வழங்க வேண்டிய பொருட்களை கம்பன் வழங்குவதும், அதனை அருகில் நின்று அண்ணாதுரை எம்.பி. வேடிக்கை பார்ப்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.