திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா! 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள்! இந்து சமய அறநிலையத்துறை கணிப்பு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இந்தாண்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை கணித்துள்ளது.
கடந்தாண்டு 32 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை மகா தீபத்திற்கு வருகை தந்த நிலையில் இந்தாண்டு கூடுதலாக 8 லட்சம் பேர் வரக்கூடும் என அமைச்சர் சேகர்பாபு எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது;

''திருவண்ணாமலையில் நடைபெறுகின்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் கடந்தாண்டு 32 லட்சம் பக்தர்கள் மகா தீபத்திற்கு வருகை தந்திருந்தார்கள். இது போன்ற திருவிழாக்களின்போது முன்னரே திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் கடந்தாண்டு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளில் சிறு குறையை கூட காண முடியவில்லை. ''
''அதேபோல இந்தாண்டு நடைபெறவுள்ள தீபத்திருவிழாவிற்கு அமைச்சர் எ.வ.வேலுவும், நானும் இணைந்து மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினோம். இந்தாண்டு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ''
''பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 14,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 16 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், 36 இடங்களில் மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் கிரிவல பாதையை தூய்மைப்படுத்தி இருக்கின்றார்கள். ''
''பௌர்ணமி தினங்களில் ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு பொது தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே பக்தர்களின் எண்ணிக்கை கூடினாலும் அனைத்து வசதிகளையும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு இருமடங்காக்கி இறை தரிசனத்திற்கும், பௌர்ணமி கிரிவலத்திற்கும், தீப தரிசனத்திற்கும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் மற்ற துறைகளோடு ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications