திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்னாத்தூரில் 16 ஆம் நூற்றாண்டு கால சமணர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை: 16-ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் கோவிலுக்கு ஊர்மக்கள் தானம் தந்த செய்தியை சொல்லும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து வந்தவாசி பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது , சீயமங்கலத்தை அடுத்த தென்னாத்தூர் கிராமத்தில் பாழடைந்த கோவில் ஒன்றில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டைக் கண்டுபிடித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சீயமங்கலத்தில் இருந்து மடம் செல்லும் சாலையில் உள்ள தென்னாத்தூர் கிராமத்தில் ஒரு கோவில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது

அர்த்தமண்டபம்
சிறிய கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் கூடிய இக்கோவிலில் புதர்கள் மண்டி போய் மரங்கள் முளைத்துக் காணப்பட்டது. இக்கோவிலின் உள்ளே எந்த சிற்பமும் காணக்கிடைக்கவில்லை. மேற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலின் தெற்கு பக்க அதிட்டானத்தில் ஆவணம் செய்யப்படாத மூன்று வரி கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சமண சமயம்
மேலும் அதனைச் சுத்தம் செய்து பார்க்கையில் இக்கோயில் சமண சமயத்தைச் சார்ந்த மகாவீரர் கோவில் என்பதைக் கல்வெட்டு மூலம் அறியமுடிந்தது. முக்குடை செல்வர் என்று மகாவீரரைக் குறிப்பிடும் இக்கல்வெட்டு , தென்னாற்று ஊர் மக்கள் இக்கோயிலுக்குப் பல்லவராயர் மனை என்று குறிப்பிடப்படும் இடத்திற்கு கிழக்கே உள்ள மனையையும் , ஏந்தல் நிலம் மற்றும் இரண்டு கிணறுகளுக்கு வரி நீக்கி தானம் அளித்த செய்தியை அறியமுடிகிறது.

ஆடுவார்
இத்தானத்திற்கு சாட்சியாக மலையபெருமாள் , ஆடுவார் , குருகுலராய ஆடுவார் மற்றும் அப்பாண்டையார் இருப்பதாகவும் சந்திர சூரியர் உள்ளவரை இத்தானம் செல்லும் என்று குறிப்பிடப்படுகிறது. இக்கோவிலின் அருகே தலை உடைந்த மகாவீரர் சிலை ஒன்று இருந்ததாகவும் , உறை கிணறு ஒன்று இருந்ததாகவும் அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுள் கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பிற்கால விஜயநகர காலம்
இக்கோயிலின் கட்டுமானம் பிற்கால விஜயநகர காலத்தைச் சேர்ந்ததாகும். இவ்வூரில் சமணர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துள்ளதை அவ்வூரில் இன்றும் "முத்தா கோயில்" என்று இன்றும் சிறப்பாக இயங்கி வரும் மற்றுமொரு சமணர் கோயில் மூலம் அறியலாம். ஏனோ 500 வருடம் பழமையான இக்கோயிலைக் கேட்பார் அற்று கைவிட்டதனால் இக்கோவில் புதர் மண்டி அழிவின் விளிம்பில் தத்தளிப்பது வேதனையாகும். இவ்வூரில் உள்ள சமண சமயத்தைச் சார்ந்தோர் இக்கோயிலை புனரமைத்து , 500 வருடப் பழமையான கோயிலை மீண்டும் வழிபாட்டிற்குக் கொண்டு வருவதே முக்குடை செல்வரான மகாவீரருக்குச் செலுத்தும் மரியாதையாகும்.












Click it and Unblock the Notifications