ஜாதிவாரி கணக்கெடுப்பு.. நேற்று எங்க அப்பா ராமதாஸ்.. இன்று அவரு பிள்ளைங்க நாங்க போராடுகிறோம்: சீமான்
திருவண்ணாமலை: ஜாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசே நடத்தலாம் என்பதற்கு பீகார் உதாரணமாக இருக்கும் போது ஏன் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பில் ஆரம்பித்தார். பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். தமிழ் தேசிய இனம் ஒரு தொன்மை இனம். இதற்கென ஒரு மெய்யியல் கோட்பாடும் வழிபாட்டு முறையும் இருக்கிறது. எங்களுக்கு கடவுள் இல்லை. எங்களுக்கு இறை, தெய்வம் உண்டு. எங்கள் முன்னோர்களை வழிபடுகிற குலதெய்வ வழிபாட்டு முறை எமக்கு உண்டு. அதான் முருகன், சிவன், வேந்தன் இந்திரன், கொற்றவை வழிபாடு. சிவகங்கை மாவட்டத்தில் வீரமாகாளியம்மன் எங்கள் குல தெய்வமாக இருக்கிறது. நான் வேலை கையில் எடுத்த போது சுப.வீரபாண்டியன் மூலமாக முரசொலியில் காரி உமிழ்ந்தீர்கள். அதையே பாஜக கையில் எடுத்த போது நீங்களும் கையில் எடுத்தீர்கள். நீங்கள் செய்தால் மட்டும் சரியா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்புகிறார். திமுக நேற்றுதான் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வந்ததா? நாங்கள் பேசலாம். அதிகாரத்துக்கு வரலை. எங்க தாத்தா ஆனைமுத்து பேசினாரு.. அதுக்கு அப்புறம் எங்க அப்பா ராமதாஸ் அய்யா ராமதாஸ் பேசினாரு.. அதற்கு அப்புறம் அவரு பிள்ளைங்க நாங்க பேசுறோம். நீங்க எங்க பேசுறீங்க? ஜாதிவாரி கணக்கெடுப்பை நீங்க எடுக்க முடியாதா? பீகாரில் நிதிஷ்குமார் இப்படித்தான் பிரதமருக்கு கடிதம் எழுதிட்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாரா? பாஜகதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதுன்னு தெரியுமே.. அவங்களோட உண்மையான எண்ணிக்கை தெரிஞ்சுடுமே.. அமாதிரி திமுகவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது.. ஏனெனில் தமிழர் அல்லாதோர் எத்தனை இடங்களை அபகரித்திருக்கிறார்க என்பது அம்பலமாகிவிடும் என்பதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது திமுக அரசு.
இந்தியாவில் கூட்டாட்சி என்பதே இல்லையே. இந்தியாவில் ஒவ்வொரு மாநில கட்சிகளும் ஒன்று கூடி சுழற்சி முறையில் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்ளும் போதுதான் என் தேசம், என் மக்கள் என்ற உணர்வு வரும். இந்தி மொழி பேசுகிறவர்களுக்குதான் பிரதமர் பதவி என்கிற போது எப்படி தேசம், மக்கள் என்கிற உணர்வு வரும்? இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications