சுதந்திர தினம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!
சிதம்பரம்: உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் 76 ஆவது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தது. திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தேசியக்கொடி ஏற்றி வந்து பாரதியார் பாடலைப் பாடினார்.
Recommended Video
ஒவ்வொரு வருடமும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு விசேஷம் உண்டு. இந்தியாவிலேயே, தில்லை சிதம்பரத்தில் மட்டும் தான் சுதந்திர தினத்தில் நமது தேசிய கொடி கோயிலின் கோபுரத்தின் மீது ராஜா கம்பீரத்துடன் ஏற்றப்படுகிறது.
அதிகாலையில் நமது தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்யப்பட்டது.
இதனையடுத்து நடராஜர் கருவறையில் வைத்து பல்வேறு பூஜைகள் செய்து ஊர்வலமாக எடுத்து வந்து, கோவில் பொது தீட்சிதர்கள் 138 அடி உயரம் உள்ள கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்தனர். பின்னர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகள் வழங்கப்பட்டன.
இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும். இந்த ஆண்டும் வழக்கம் போல் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் இசையமைப்பாளரும் ராஜ்யசபா எம்.பியுமான இளையராஜா தேசியக்கொடியை ஏற்றி வைத்து பாரதியார் பாடலைப் பாடினார். கடந்த 1947ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
76வது சுதந்திர தின விழாவையொட்டி மாநிலங்களவை நியமன உறுப்பினரும். இசையமைப்பாளருமான இளையராஜா திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பாரதியாரின் பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாடலை இளையராஜா பாடினார்.