திருவண்ணாமலை மக்களவை தொகுதியை கைப்பற்ற போவது இவர்களில் ஒருவர்தான்!
Recommended Video
திருவண்ணாமலை: தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளில் புதிய குழந்தை திருவண்ணாமலை. 2008ம் ஆண்டுதான் இந்த தொகுதி பிறந்தது. முதல் முறை (2009) நடந்த தேர்தலில் திமுகவும், அடுத்து 2014ல் நடந்த தேர்தலில் அதிமுகவும் வென்றன.
முன்பு திருப்பத்தூர் தொகுதியில் இந்த திருவண்ணாமலை இணைந்திருந்தது. பின்னர் தனித்துப் பிரிக்கப்பட்டது. புதிய திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில் 6 சட்டசபைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம், திருவண்ணாமலை, கீழ் பென்னாத்தூர், கலசப்பாக்கம் ஆகியவை அவை.
2008ல் நடந்த முதல் லோக்சபா தேர்தலில் திமுகவின் டி வேணுகோபால் வென்று, திருவண்ணாமலையின் முதல் எம்.பி. என்ற பெருமையைப் பெற்றார். அடுத்து 2014ல் நடந்த தேர்தலில் தொகுதி அதிமுக பக்கம் மாறி வந்தது. தற்போது உறுப்பினராக இருப்பவர் வனரோஜா. 59 வயதான வனரோஜா ஒரு ஆசிரியை ஆவார். பிஎட் படித்துள்ளார். அதிமுகவை சேர்ந்த இவர் முதல் முறையாக இந்த தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
3 கோடி மிச்சம்
இதுவரை இவர் நாடாளுமன்றத்தில் 49 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 370 கேள்விகளை எழுப்பியுள்ளார். இவரது நாடாளுமன்ற வருகை பதிவு 77 சதவீதமாகும். தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து இவருக்கு கிடைத்தது 22.73 கோடியாகும். அதில், 19.52 கோடி ரூபாயை செலவழித்துள்ளார். ரூ. 3.21 கோடி மிச்சம் உள்ளது.
யாருக்கு எவ்வளவு வாக்குகள்
திருவண்ணாமலை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 13,52,966. இங்கு ஆண் வாக்காளர்கள் 6,75, 321 ஆவர். பெண் வாக்காளர்கள் 6,77,645 ஆவர். கடந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் 79 சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளில் வன ரோஜாவுக்குக் கிடைத்தது 5,00,751. எதிர்த்துப் போட்டியிட்டவர் திமுகவின் அண்ணாதுரை. அவருக்குக் கிடைத்த வாக்குகள் 3,32,145 வாக்குகள்.
முக்கிய வேட்பாளர்
2009 தேர்தலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. அத்தேர்தலில் திமுகவை கடுமையாக எதிர்த்து கடும் போட்டியைக் கொடுத்தவர் மறைந்த ஜே. குரு. மாவீரன் என்று பாமகவினரால் செல்லமாக அழைக்கப்படும் காடு வெட்டி குருதான் அந்த முக்கிய வேட்பாளர்.
கணிக்க முடியவில்லை
2வது இடத்தைப் பிடித்த குருவுக்கு 2,88,566 வாக்குகள் கிடைத்தன. 3வது இடத்தைத்தான் தேமுதிக பிடித்தது என்பது நினைவிருக்கலாம். புதிய தொகுதி என்பதாலும், கடந்த இரு தேர்தல்களில் திமுக, அதிமுக தலா ஒருமுறை வென்றுள்ளதாலும் இந்தத் தொகுதி இந்த முறை யாருக்குப் போகும் என்பது கணிக்க முடியவில்லை.
யார் வசமாகும்
ஆனால் தற்போது அதிமுக மிகவும் பலவீனமாக உள்ளது. பாமக பலமாகியுள்ளது. திமுகவும் வலு கூடியுள்ளது. எனவே வரும் தேர்தலில் இங்கு திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையேதான் கடும் பலப் பிரயோகம் அமையும். கூட்டணியைப் பொறுத்து திருவண்ணாமலை யார் வசமாகும் என்பது தீர்மானமாகும்.