நான் அமைச்சராக பதவி உயர காரணமே "அம்மா" துர்கா ஸ்டாலின்தான்.. அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
திருவாரூர்: நான் அமைச்சராக உயர்வதற்கு காரணமானவர் துர்கா ஸ்டாலின் என அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முதலில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆனால் இரண்டாவதாக ஆலங்குடியில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அதற்கு முழு காரணம் அம்மா துர்கா ஸ்டாலின் அவர்கள்தான். மீண்டும் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தந்து அரசியலில் நான் அமைச்சராக உயர்வதற்கு காரணமானவர் துர்கா ஸ்டாலின்தான். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வாய்ப்பை அவர்கள் எனக்கு ஏற்படுத்தித் தராமல் இருந்திருந்தால் எனது அரசியலே திசைமாறி போயிருக்கும். அப்படி நாங்கள் பெரிதும் மதிக்கும் அவர்கள் பிறந்த மண்ணில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். அமைச்சர் தனது பதவி உயர்வுக்கு காரணம் துர்கா ஸ்டாலின் என பொதுவெளியில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த கூட்டத்தை காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நன்னாளில் தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. அதில், இந்த அரசு மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த 4 கிராம சபை கூட்டங்களின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது.

மேலும் கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துணையாரின் ஊரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் துர்கா ஸ்டாலினை பெருமிதம் பொங்க பேசினார்.












Click it and Unblock the Notifications