"அதை"த்தான் நஞ்சுன்னு சொன்னாரே பொன். ராதா.. எப்படி பயன்படுத்துவாங்க.. தம்பிதுரை நக்கல்!
பட்ஜெட் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிபோல உள்ளதாக மு.தம்பிதுரை கூறியுள்ளார்.
திருவாரூர்: "ஒருமுறை பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியின்போது ஒரு கட்சியை நாக பாம்பு என குறிப்பிட்டு அந்த விஷம் மருந்தாக பயன்படும் என்று சொல்லி இருந்தார். அதனால் அந்த நஞ்சை எப்போது பயன்படுத்துவார்கள் என்று தெரியாது. எங்கள் கட்சியை ஊழல் கட்சி என கூறுகிறாரே தவிர அவர் யாருடன் கூட்டணி என்பதை சொல்லவில்லை" என்று லோக்சபா துணைத் தலைவரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கூறியுள்ளார்.
சமீபகாலமாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வருபவர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. அதனால் அக்கட்சியோடு கூட்டணியே கூடாது என்று அதிமுக சார்பாக சொல்லி வருகிறார். எனினும் இவரது கருத்தை அதிமுக பொருட்படுத்தவில்லை. நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோதும், அதனை புறக்கணித்தார் தம்பிதுரை.
இந்நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை பட்ஜெட் குறித்து கருத்து கூறினார். அப்போது அவர் சொன்னதாவது:
வரவேற்கபட வேண்டியதே
இந்த பட்ஜெட்டில் சில சலுகைகள் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனாலும் இந்த 5 ஆண்டு காலத்தில் என்னுடைய கரூர் தொகுதி பாஜக பட்ஜெட்டால் மேம்படவில்லை. விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் தருவது போதுமானதாக இருக்காது. அதனை 12 ஆயிரம் ரூபாயாக அறிவித்திருக்கலாம்.
தேர்தல் வாக்குறுதிகள்
அதேபோல, 5 லட்சம் வரை வருமான வரி விலக்கும் போதாது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ரூ. 8 லட்சம் என்பதை அளவுகோலாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அப்படியிருக்கையில் இப்போது 8 லட்சம் வரைக்கும் வருமான வரி விலக்கு ஏன் வழங்கப்படவில்லை? இந்த பட்ஜெட் பாஜகவின் தேர்தல் வாக்குறுதிதான்" என்றார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
பின்னர், "தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு தலைமை வகிக்காது, அங்கமாக மட்டுமே இருக்கும்" என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே, அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
கருணாநிதி வீடு
அதற்கு தம்பிதுரை "எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை அவர் தெளிவாக சொல்லவில்லை. ஏனென்றால், மோடி கருணாநிதி வீட்டுக்கு சென்றார். கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அமித் ஷா அழைக்கப்பட்டிருந்தார்.
விஷம் - மருந்து
ஒருமுறை பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியின்போது ஒரு கட்சியை நாக பாம்பு என குறிப்பிட்டு அந்த விஷம் மருந்தாக பயன்படும் என்று சொல்லி இருந்தார். அதனால் அந்த நஞ்சை எப்போது பயன்படுத்துவார்கள் என்று தெரியாது. எங்கள் கட்சியை ஊழல் கட்சி என கூறுகிறாரே தவிர அவர் யாருடன் கூட்டணி என்பதை சொல்லவில்லை.
வெற்றி பெறுவோம்
தலைமை தான் கூட்டணி பற்றி முடிவு எடுக்கும். அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என தம்பிதுரை தெரிவித்தார்.