ஆர்பிஎப் என மிரட்டி மாற்றுத்திறனாளியை தாக்கிய நீடாமங்கலம் போலீஸ் ஏட்டு! ஓடும் ரயிலில் நடந்தது என்ன?
திருவாரூர்: மன்னார் குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியின் கதவை திறக்கவில்லை எனக் கூறி மாற்றுத்திறனாளி கருணாநிதி என்பவரை போலீஸ் ஏட்டு ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொலை தூர ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் மன்னை எக்பிரஸ் ரயிலில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி ஒன்று உள்ளது. இந்த பெட்டிக்குள் புகுந்து இரு கால் இல்லாத மாற்றுத்திறனாளியை கொடூரமாக போலீஸ் ஏட்டு ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- மன்னார் குடியில் இருந்து சென்னை புறப்பட்ட மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் மாற்றுத்திறனாளி கருணாநிதி என்பவர் பயணித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் சாதாரண பயணிகள் செல்ல அனுமதி கிடையாது.

இதனால் ரயில் புறப்பட்ட பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியை உள்பக்கமாக பயணிகள் பூட்டியதாக சொல்லப்படுகிறது. ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையம் வந்த போது, ரயில்வே பாதுகாப்பு போலீசார் எனக் கூறிய மூன்று பேர், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியை திறக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பெட்டியில் இருந்த மாற்றுத்திறனாளிகள் பெட்டியை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. திருவாரூரில் ரயில் நின்ற போது பயணி ஒருவர் இறங்குவதற்காக மாற்றுத்திறனாளி பெட்டியில் இருந்து பயணி ஒருவர் இறங்குவதற்காக பெட்டியை திறந்துள்ளனர்.
அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ஏறிய மூன்று பேரும், நாங்கள் ரயில்வே பாதுகாப்பு படை என சொல்லியும் கதவை திறக்க மறுக்கிறீர்கள்..என ஆவேசமாக கூறி, மாற்றுத்திறனாளி கருணாநிதியை கன்னத்தில் அடித்துள்ளனர். பின்னர் அந்த பெட்டியில் இருந்து இறங்கி அதே ரயிலில் மூன்று பேரும் பயணித்துள்ளனர். மாற்றுத்திறனாளி பயணியை ரயில்வே போலீசார் என கூறிக்கொண்டு மூன்று பேர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதில், மாற்றுத்திறனாளி கருணாநிதியை தாக்கியது நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் பழனி என்பது தெரியவந்தது. மாற்றுத்திறனாளியை தாக்கியவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கருணாநிதி இது தொடர்பாக கூறியதாவது:- ஆர்.எபி.எப் என்று சொன்னார்கள். நானும் ஐடி கார்டை காட்டுங்கள் என்றேன். ஆர்பிஎப் என்ன முழு போதையில் சண்டை போடுவதற்கா வருவார்கள்.
நான் ஐடி கார்டை காட்ட சொல்லும் போது அது பற்றி கண்டுக்கவே இல்லை. வந்து அடித்தார்கள். நானும் செயினை பிடித்து இழுத்து பார்த்தேன். வண்டி நிற்கவில்லை. சும்மா பெயருக்குத்தான் செயின் இருந்துள்ளது. எனக்கு நடந்த மாதிரி இன்னொரு முறை யாருக்கும் நடக்க கூடாது" என்றார். ரயில்களில் இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும் ரயில்வே போலீசார் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications