திடீர் ட்விஸ்ட்.. அதிமுக கூட்டணி உடைந்தது.. "இடியாக" வந்த செய்தி.. அறிவித்த சிவராமன்
திருவாரூர்: அதிமுக கூட்டணியில் இருந்து தமிழ்நாடு மக்கள் கட்சி வெளியேறுவதாக அதன் மாநில பொதுச் செயலாளர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அதேபோல பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் 4 முனை போட்டி நிலவுகிறது.
எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமிழ்நாடு மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சேர்ந்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தமிழ்நாடு மக்கள் கட்சி அந்த கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.
இது குறித்து திருவாரூரில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிவராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆரம்பத்தில் பாஜகவை எதிர்ப்பது போல நடித்த அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம்.
உண்மையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் என்று நினைத்து நாங்கள் அவருடன் கூட்டணி வைத்தோம். ஆனால் அதன் பிறகு அதிமுகவின் போக்கு முழுக்க முழுக்க திமுகவை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தது. பாஜகவை எதிர்த்து ஒரு குரல் கூட எழுப்பவில்லை.
இதுவரை எந்த பிரச்சாரங்களிலும் பாஜகவை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து எங்கள் கட்சி சார்பில் அதிமுகவிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் எங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இதிலிருந்தே பாஜகவின் மறைமுக நண்பனாக அதிமுக செயல்பட்டு வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
குறிப்பாக பாஜகவின் பி டீமாக செயல்படும் அதிமுகவின் உண்மை முகம் வெளிவந்ததால் அதிமுக கூட்டணியிலிருந்து தமிழ்நாடு மக்கள் கட்சி வெளியேறுகிறது. தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவை இந்த தேர்தலில் தோற்கடிப்பதற்கு மிகத் தீவிரமாக நாங்கள் செயலாற்றுவோம் என உறுதி கூறினார். தமிழ்நாட்டு மக்கள் அஇஅதிமுகவையும், பாஜகவையும் புறக்கணிக்க வேண்டும் என்றார்.
ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் உள்ள புரட்சி பாரம் கட்சியும் தங்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்கவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என 3 தொகுதிகளில் ஒரு தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு பூவை ஜெகன் மூர்த்தி கேட்டார்.
ஆனால் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை இதனால் அந்த கட்சி அதிமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பதை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் "அதிமுக தலைவர்கள் எங்களை சமாதானம் செய்து அடுத்த தேர்தலில் கூடுதலாக பார்த்துக் கொள்ளலாம்" என தெரிவித்தனர். இதனால் புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம் என ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications