''9 ஆண்டுகளில் 250 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிய பாஜக! 3ஆம் தர அரசியல் இது''! -தமிமுன் அன்சாரி
திருவாரூர்: கடந்த 9 ஆண்டுகளில் 250க்கும் அதிகமாக எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்கியுள்ளதாகவும் இதன் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி 3ஆம் தர அரசியல் செய்து வருவதாகவும் மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார். மேலும், அவர் பேசியதாவது;
''பாட்னாவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்ததும், நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக சந்திக்க இருப்பதும் பாஜகவுக்கும், மோடிக்கும் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான் நேர்மையாக களத்தை சந்திக்க முடியாமல் , எதிர்கட்சிகளை உடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.''

''மஹாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, தங்கள் கூட்டணி ஆட்சியில் அவர்களுக்கு பதவிகளை கொடுத்துள்ளனர். இது மூன்றாம் தர அரசியலாகும். கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுக்க 250க்கும் அதிகமான MLA க்களை விலைபேசி, கட்சி மாற செய்துள்ளனர். ஆட்சி கவிழ்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இது அவர்களுக்கு ராஜதந்திரமாக தெரியலாம். ஆனால் இதை மக்கள் ரசிக்கவில்லை. தவறாகவும், இழிவாகவும் கருதுகிறார்கள்.''
''ராகுல் காந்தி யாத்திரைக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. கர்நாடக தேர்தல் வெற்றி அதை உறுதிப்படுத்துகிறது. மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் அலை வீசுகிறது. இது வலதுசாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.''
''ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறான கிசிச்சையால் ஒன்றரை வயது குழந்தையின் கை துண்டிக்கப்பட்டது வேதனையளிக்கிறது. இனி யாரும் இவ்வாறு பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் துறை சார்ந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் குழந்தையின் எதிர்காலம் மற்றும் பெற்றோரின் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு அக்குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்''.












Click it and Unblock the Notifications