திருவாரூர்: கர்ப்பிணி மனைவி...அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் ஷாக் அடித்து பலி
அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சமத்துவ நாளாக இன்று தமிழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த நபரின் பெயர் சின்னத்துரை என்பதாகும். அவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் என்பரின் மகனாவார். 31 வயது நிரம்பிய சின்னத்துரைக்கு திருமணம் ஆகி மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
இன்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கிராமத்தில் பேனர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பேனர் அருகில் இருந்த மின்சார கம்பியில் பட்டதில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்த வந்த முத்துப்பேட்டை போலீசார் இளைஞர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.