ஏழுமலையானே.. திருப்பதியில் கடத்தப்பட்ட சிறுவன் அருள்முருகன் பத்திரமாக மீட்பு! பெற்றோர் ஆனந்த கண்ணீர்
திருப்பதி: ஏழுமலையான் கோவிலுக்கு சென்று விட்டு திருப்பதி பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த போது கடத்தப்பட்ட 2வயது சிறுவன் காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மர்ம நபர் கடத்திச் சென்ற சிறுவனின் பெயர் அருள் முருகன். சென்னையை சேர்ந்த சந்திரசேகர், மீனா தம்பதியின் இரண்டாவது மகன் அருள் முருகன். புரட்டாசி மாதம் என்பதாலும் தொடர் விடுமுறை காரணமாக சந்திரசேகர், மீனா தம்பதியினர் குழந்தைகளுடன் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தனர். தரிசனம் முடித்த அவர்கள், சென்னை செல்வதற்காக அடிவாரத்தில் உள்ள திருப்பதி பேருந்து நிலையத்தில் இரவு தங்கியுள்ளனர்.

நள்ளிரவு 2 மணி வரை சிறுவன் பெற்றோரின் அருகில் தூங்கிய நிலையில், 2.20 மணியளவிற்கு விழித்து பார்த்த போது, சிறுவன் அருள்முருகன் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவு 2.10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சிறுவனை தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்துள்ள காவல்துறையினர் குழந்தையை கடத்திய மர்ம நபரை பிடிக்கவும், சிறுவனை மீட்கவும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மாயமான சிறுவன் அருள்முருகன், பசித்தால் கூட சொல்லத்தெரியாத பச்சிளம் பாலகன் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறினர். சிறுவனை மீட்டுத்தர தமிழ்நாடு அரசும், ஆந்திர அரசை வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் திருப்பதி நகரம் முழுவதும் தேடி வந்தனர்.
மாதவ மலையில் கடத்தப்பட்ட குழந்தை இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. கடத்திய நபர் சுதாகர் என்பதும் அவர் தனது சகோதரி வீட்டில் குழந்தையை விட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது. குழந்தை அருள் முருகனை மீட்ட காவல்துறையினர் தப்பி ஓடிய சுதாகரை தேடி வருகின்றனர். நள்ளிரவில் காணாமல் போன குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் சந்திரசேகர் மீனா தம்பதியினர் ஆனந்த கண்ணீர் மல்க காவல்துறையினருக்கு நன்றி கூறினர்.












Click it and Unblock the Notifications