திருப்பதி முன்னாள் விஜிலென்ஸ் அதிகாரி மர்ம மரணம்! மனைவிக்கு அனுப்பியிருந்த மெசேஜால் பரபரப்பு!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் எண்ணும் பணியில் வெளிநாட்டு பணத்தை திருடியதாக ஊழியர் ஒருவரை பிடித்த முன்னாள் விஜிலென்ஸ் அதிகாரி சதீஷ்குமார் ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் உண்டியல் வருமானம் குறைந்தபட்சம் 3 லட்சமாவது வந்துவிட்டது. இது இல்லாமல் வெளிநாட்டினரும் உண்டியலில் காணிக்கை அளிக்கிறார்கள்.
தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்டவையும் காணிக்கையாக கிடைக்கின்றன. உண்டியல் காணிக்கைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பரகாமணி எனப்படும் உண்டியல் எண்ணும் மையத்தில் தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் தன்னார்வலர்கள், ஊழியர்கள் எண்ணுவார்கள்.
அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உண்டியல் எண்ணும் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரரா பதிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் தேவஸ்தானத்தின் தலைமை எழுத்தராக இருந்த ஜீயர் ரவிக்குமார், 9 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து திருமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பல ஆண்டுகளாக இது போன்ற கொள்ளை சம்பவத்தில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த சதீஷ்குமார் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆரம்பகட்ட நடவடிக்கைளை எடுத்திருந்தார்.
இந்த நிலையில் லோக் அதாலத் மூலம் குற்றம்சாட்டுக்குள்ளான ரவிக்குமார், தன்னிடம் உள்ள சொத்துகளை தானமாக அளித்து தேவஸ்தான நிர்வாகத்துடன் சமரசம் செய்து கொண்டார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் லோக் அதாலத் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த ஆந்திர உயர்நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிஐடி, ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி டிசம்பர் 2ஆம் தேதிக்குள் சீலிடப்பட்ட கவரில் வைத்து அறிக்கை கொடுக்குமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய சிஐடி , சதீஷ்குமாரிடம் கடந்த 6ஆம் தேதி விசாரணை நடத்தியது. அப்போது அவர் லோக்அதாலத் மூலம் சமரச தீர்வு ஏற்பட போலீஸாரின் அழுத்தம் தனக்கு இருந்ததாக சிஐடி போலீஸாரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜராக இருந்த சதீஷ்குமார், அனந்தபூர் மாவட்டத்தின் தாடிபத்ரி அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து சகோதரர் ஹரி என்பவர், உண்டியல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிலர், சதீஷ் குமாரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்திருந்தார்.
மேலும் தனது சகோதரன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இறப்பதற்கு முன்னர் தனது மனைவிக்கு போன் செய்த சதீஷ் குமார், அவர் போனை எடுக்காததால் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் தான் பாதுகாப்பாக உணரவில்லை என அனுப்பியிருந்தார்.
இதையெல்லாம் வைத்து போலீஸாரும் விசாரணையில் இறங்கினர். அதில் சதீஷ்குமாரின் உடல் கிடைத்த இடத்திற்கு அவரை போன்ற உருவபொம்மைகளை செய்து கொண்டு சென்ற போலீஸார், அவரது உடல் கிடைத்த இடத்தில் இருந்து பொம்மைகளை போட்டனர்.
பின்னர் அந்த பொம்மைக்கு எங்கெல்லாம் காயம் ஏற்பட்டது, சதீஷ்குமாரின் உடலில் எங்கு காயம் இருந்தது என்பதை ஒப்பிட்டனர். அதில் நிறைய வித்தியாசம் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே சதீஷ் குமாரை யாராவது கொன்றுவிட்டு ரயிலில் இருந்து வீசினரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications