லட்டு விற்பனையால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான கோயிலில் பயன்படுத்தப்படும் லட்டுகளில் கடந்த காலங்களில் மாட்டின் கொழுப்பு, மீன் இறைச்சி உள்ள நெய் சேர்க்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி லட்டின் விற்பனை பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், லட்டு விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான கோயில் உலகெங்கும் பிரசித்தி பெற்றது. பல நாடுகளில் இருந்தும் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வருகிறார்கள்.

பல நேரங்களில் நாம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க மணிக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டி இருக்கும். இந்தளவுக்கு முக்கியத்துவம் பெற்ற கோயிலில் தான் இப்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
ஷாக் தகவல்: அதாவது திருப்பதி ஏழுமலையான கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட லட்டில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக தற்போது ஆந்திர முதல்வராக உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான ஆய்வக முடிவுகளும் கூட வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏழுமலையான் பக்தர்கள் கொதித்துப் போய் உள்ளனர். இருப்பினும், இதை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுத்தாலும் கூட, ஆய்வக முடிவுகள் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டு இருப்பதையே காட்டுகிறது. இதனால் திருப்பதி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இப்போது லட்டுகளை வாங்கவே தயக்கம் காட்டுகிறார்களாம்.
வருவாய் எவ்வளவு: திருப்பதி கோயிலின் முக்கிய வருவாய்களில் ஒன்றாக லட்டு விற்பனை இருக்கும் நிலையில், இந்த செய்தியால் அது பாதிக்கப்படும் என்றே தெரிகிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். திருப்பதி திருமலையில் தினசரி சுமார் 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 500 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறதாம்.
3 சைஸ் லட்டு: திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள் கோவில் வளாகத்திலும், வெளியில் இதற்காகவே அமைக்கப்பட்டுள்ள கவுண்டர்களிலும் லட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். சரியாக பேக்கிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் லட்டுகள் 15 நாட்கள் வரை நல்ல நிலையில் இருக்கும். திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகள் 3 சைஸ்களில் கிடைக்கும். சிறிய சைஸ் லட்டுக்கள் 40 கிராமில் இருக்கும். மிடியம் சைஸ் லட்டுக்கள் 175 கிராமிலும், பெரிய சைஸ் லட்டுக்குள் 750 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
இதில் கோயிலுக்கு வழங்கப்படும் அனைத்து பக்தர்களுக்கும் சிறிய லட்டுகள் இலவசமாக வழங்கப்படும். அதேநேரம் மிடியம் சைஸ் லட்டுகளை ₹ 50 கொடுத்தும், பெரிய சைஸ் லட்டுகளை ரூ 200 கொடுத்தும் பக்தர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
திருப்பதி கோயில்: திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள் தவறாமல் வாங்கி வரும் பிரசாதத்திற்குப் பயன்படுத்தப்படும் நெய்யில் இதுபோல மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் இருப்பதாக எழுந்துள்ள புகார் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதில் தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications