Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருக்கம் தீவு: தமிழ்நாடு- ஆந்திர எல்லையில் ஒரு மறக்கப்பட்ட கிராமம்! உயிரை பணயம் வைத்து வாழும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் அமைந்திருக்கிறது இருக்கம் தீவு. இந்தத் தீவில் சுமார் 2000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மாநிலங்களின் எல்லையில் அமைந்திருப்பதால் மறக்கப்பட்ட இந்த தீவில் ஒரு பாலம் இல்லாததால் படகு போக்குவரத்து மட்டுமே ஒரே வழியாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த தீவுக்கு நமது 'ஒன் இந்தியா’ சார்பில் நேரடி விசிட் அடித்தபோது, அப்பகுதி மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இருக்கம் தீவு, திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 50 கி.மீ தொலைவில் பழவேற்காடு ஏரியின் நடுவே அமைந்துள்ளது. இந்தத் தீவின் பரப்பளவு 1,600 ஏக்கர். இந்த அழகான தீவு ஆங்கிலத்தில் Hidden island, Irukkam island, Lake island என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. பழவேற்காடு ஏரியிலிருந்து படகு மூலமாகச் சென்று இந்த தீவை அடையலாம். இந்த தீவை அடைவதற்கான ஒரே வழி நீர்வழி போக்குவரத்து தான். ஆரம்பாக்கத்தில் இருந்து 8 கி.மீ உள்ள இந்த தீவுக்கு படகு வழியாகச் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகும்.

Tamil nadu Andhra Irukkam Island

பிரதான நிலப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ள தீவான இங்கு சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன் பிடித்தலை மட்டுமே நம்பியுள்ளனர். எனினும், இந்தப் பகுதிக்கு செல்ல பாலம் இல்லாத காரணத்தால், முற்றிலும் ஏரியாலும், உப்பங்கழிகளாலும் சூழப்பட்ட இந்த இருக்கம் தீவு, வெளி உலகில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு காணப்படுகிறது.

இருக்கம் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்க பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்னாள் ஆந்திர பிரதேச முதல்வர் நெடுருமல்லி ஜனார்த்தன ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் இருந்தே எழுந்து வருகிறது. இருக்கம் தீவு கிராம மக்கள் முதல்வரிடமே தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களைத் தெரிவித்து, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரினர். இருப்பினும், அதன் பின்னர் பல அரசுகள் மாறினாலும், இந்த பாலம் அமைக்கும் கோரிக்கை இன்னும் கோரிக்கை என்ற அளவிலேயே நீடிக்கிறது.

Tamil nadu Andhra Irukkam Island

வேணாடுவிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டுவது தங்கள் பயணப் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று இருக்கம் தீவு மக்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதுவரை வந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் புறக்கணிப்பால் இதுவரை பாலம் அமைக்கப்படாமலேயே இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பலர் விரக்தியடைந்து, வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர்.

இருக்கம் தீவு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேகர் நமது ஒன் இந்தியா செய்தியாளரிடம் பேசும்போது, பள்ளிக்குச் செல்ல படகில் பயணம் செய்யும் குழந்தைகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்குச் சென்று வருகின்றனர் எனக் கவலை தெரிவித்துள்ளார். "எங்கள் குழந்தைகள் வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும், அவர்கள் திரும்பி வரும் வரை நாங்கள் கவலையுடன் காத்திருக்கிறோம்" என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

Tamil nadu Andhra Irukkam Island

மருத்துவ வசதிகள் இல்லை: மருத்துவ வசதிகள் எதுவும் இல்லாதது முக்கிய பிரச்சனையாக இருக்கிறது, தீவு என்பதால் அவசரத்துக்கு மருத்துவமனைக்குச் செல்ல முடியாத சூழல் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் மருத்துவமனைகளை அடைவதில் சிரமப்படுகிறார்கள், இதனால் படகுகளில் பல பிரசவங்கள் நடந்துள்ளன. தாமதத்தால் சில நேரம், இறப்புகள் கூட ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் இருக்கம் தீவு மக்கள்.

இளைஞர் இடம்பெயர்வு: அப்பகுதியில் மீன்பிடித்தல் தவிர வேறு வேலைவாய்ப்பு இல்லாததால், பல இளைஞர்கள் தீவை விட்டு வேறு நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றுள்ளனர். இரண்டு மணி நேர படகுப் பயணம் காரணமாக பலர் விடுமுறை நாட்களில் கூட, தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வரத் தயங்குகின்றனர்.

திருமணம் நடப்பதில் சிக்கல்கள்: இருக்கம் தீவுக்கு செல்வதற்கு படகு வழி தவிர வேறு போக்குவரத்து வசதியே இல்லாததால், இந்த தீவில் இருக்கும் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் திருமணம் ஆகவில்லை. பெற்றோர்கள் தங்கள் மகள்களை இங்குள்ளவர்களுக்கு திருமணம் செய்து வைக்கத் தயங்குவதால், தீவில் உள்ள பல இளைஞர்கள் திருமணமாகாமல் இருக்கிறார்கள்.

Tamil nadu Andhra Irukkam Island

அவசரத்துக்கு மருத்துவமனைக்குக் கூடச் செல்ல முடியாது குறித்த பயமும், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் குடும்பங்கள் அங்கு குடியேறுவதைத் தடுக்கின்றன. எனினும், பணக்கார முதலீட்டாளர்கள் இந்தத் தீவில் நிலங்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உள்கட்டமைப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், பல குடும்பங்கள் ஏற்கனவே தீவை விட்டு வெளியேறிவிட்டன, மீதமுள்ள குடும்பங்களும், நல்ல வாய்ப்பு வந்தால் வெளியேறும் நிலையிலேயே இருக்கின்றன. அரசு கவனித்து பாலம் கட்டாவிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் கிராமம் முற்றிலுமாக கைவிடப்படலாம் என்று கவலை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். இருக்கம் தீவு மக்களின் கண்ணீர்க் குரல் அரசாங்கத்தின் காதுகளை எட்டி பாலம் கட்டப்படுமா? இந்தக் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+