சர்ச்சையில் சிக்கிய விக்கி நயன் தம்பதி.. “விதிகளை மீறி செருப்பு அணிந்து” - தேவஸ்தானம் விசாரணை!
திருப்பதி : திருப்பதி மலையில் நடைமுறையில் இருக்கும் விதிகளை மீறி செயல்பட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் போட்டோஷூட் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த மனசுதான் சார் கடவுள்.. ஆதரவற்ற 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து கொடுத்த நயன்தாரா-விக்னேஷ்!
விக்கி - நயன் திருமணம்
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிலையில், திருமணம் முடிந்த பின் இன்று திருப்பதி மலைக்கு வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்து கொண்டனர். அதன் பின் கோவிலுக்கு வெளியே வந்து அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று போட்டோஷூட் நடத்தினர்.
போட்டோஷூட் சர்ச்சை
இது தற்போது விவாதமாக மாறியுள்ளது. இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான நிர்வாகம் நடைபெற்ற தவறுக்கு யார் காரணம் என்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பால்ரெட்டி, ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர்,கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெற வேண்டும்
மேலும் பெரிய அளவில் போட்டோஷூட் நடத்த தேவஸ்தானத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்கு முன் இதுபோல் யாரும் ஏழுமலையான் கோவில் முன் போட்டோஷூட் நடத்தியது கிடையாது. எனவே இது பற்றி அவர்களிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை
மேலும் அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த தவறி விட்டனர். எனவே அதற்கான காரணம் பற்றி அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.