திருப்பதிக்கு போறீங்களா? இன்று மட்டும் புதிய விதிமுறைகள்! ஏழுமலையானை யாரெல்லாம் தரிசிக்கலாம்?
திருப்பதி: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்கும் நிகழ்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அது போல் இன்று விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி கடந்த 10-ஆம் தேதி நடந்தது. இதையொட்டி அனைத்து வைஷ்ணவ கோயில்களில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. இந்த வாசல் வழியாக வந்து பெருமாளை தரிசித்தால் நம் பாவங்கள் நீங்கி புண்ணியம் ஏற்படும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் திருமலை திருப்பதியில் பக்தர்கள் சொர்க்க வாசலை தரிசிக்க கடந்த 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் கூறியிருந்தது. இந்த வைபவத்தை எளிய பக்தர்கள் தரிசிக்கும் வகையில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
மேலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இந்த 10 நாட்களுக்கு மட்டும் ரூ 300 தரிசன டிக்கெட் கடந்த டிசம்பர் மாதமே விற்பனை செய்யப்பட்டது. 10 நாட்களுக்கும் சேர்த்து 1.40 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இது மட்டுமல்லாமல் நடைபாதை தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இலவச தரிசனத்தில் வருவோர் டோக்கன் பெற்றால்தான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது. வரிசையில் நின்று இலவச தரிசனம் மேற்கொள்வது ரத்து செய்யப்பட்டிருந்தது. எனவே கடந்த 10 நாட்களும் ரூ 300 தரிசனம், இலவச தரிசன டோக்கன்களை பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
தினமும் கோயில் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அது போல் பல்வேறு வண்ண மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றுடன் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் முடிவடைந்துவிட்டது.
இதனால் இன்று 20ஆம் தேதி முதல் டோக்கன் இன்றி இலவச தரிசனத்திற்கு வரிசையில் செல்வோர் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக புதிய அறிவிப்பையும் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதாவது ஜனவரி 20ஆம் தேதி திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்கு எஸ்எஸ்டி டோக்கன்கள் விநியோகம் செய்யப்படாது. அன்று சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசன வரிசையில் மட்டுமே சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
அது போல் ஜனவரி 19ஆம் தேதி, 20 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் இந்த இரு நாட்களும் ஆஃப்லைனில் வழங்கப்படமாட்டாது. ஜனவரி 20ஆம் தேதி திருப்பதியில் புரோட்டோகால் தவிர மற்ற விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications