திருமலை திருப்பதியில் 120 முதல் 130 நாட்களில் முளைக்க போகும் பிரச்சினை! தேவஸ்தானம் எடுத்த முடிவு!
திருப்பதி: திருமலை திருப்பதியில் பருவமழை பெய்யாததால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். கூட்டமானது குறையாமல் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ரூ. 300 தரிசனத்தில் ஏழுமலையானை பார்ப்பதற்கே 3 முதல் 5 மணி நேரம் ஆகிறது.

அது போல் இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் முதல் 36 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி பக்தர்கள் மட்டுமல்லாமல் திருமலையில் பல்வேறு கடைகள், ஹோட்டல்கள், அறைகள், கோயிலில் பணியாற்றுவோரின் வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் திருமலை திருப்பதியில் நடப்பாண்டில் சராசரியை காட்டிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. திருப்பதியை ஒட்டியுள்ள அணைகளில் 120- 130 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அது போல் தண்ணீர் பயன்பாட்டிலும் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணை, ஆகாச கங்கை, கோகர்பம், குமாராதாரா, கல்யாணி அணைகளை மட்டுமே திருமலை நம்பியுள்ளது. திருப்பதிக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நாள்தோறும் 45 லட்சம் கேலன் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
அணைகளில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவது திருப்பதி அறங்காவலர் குழுவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால், திருப்பதி பகுதியில் மட்டும் மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தகவலின்படி , திருமலையைச் சுற்றியுள்ள 5 அணைகளின் மொத்த கொள்ளளவு 14,304 லட்சம் கேலன். ஆனால், தற்போது 5,800 லட்சம் கேலன் மட்டுமே உள்ளது. இந்த நீர் இருப்பு அடுத்த 120-130 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. இனியும் மழை பெய்யவில்லை என்றால் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம் கூறியிருப்பதாவது: 24 ஆம் தேதி நிலவரப்படி குமாராதாரா, பசுபுதாரா, ஆகாசகங்கா, கோகர்பா, பாபநாசம் ஆகிய அணைகளில் 4592 லட்சம் காலன் நீர் உள்ளது. திருமலை திருப்பதிக்கு நீர் விநியோகம் செய்யும் கல்யாணி அணையில் தண்ணீரின் இருப்பு 5608 லட்சம் காலனாக உள்ளது.
தினந்தோறும் திருமலைக்கு தேவையான நீரின் அளவு 42 லட்சம் காலன் ஆகும். எனவே அடுத்த 130 நாட்களுக்கு அதாவது இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்கள், தினசரி வரும் பக்தர்களுக்கு சேர்த்து இருக்கும் நீரே போதுமானது.
திருப்பதி மாநகராட்சிக்கு கைலாஷ்கிரி அணையிலிருந்து தண்ணீரை கொண்டு வர பைப்லைன்களை அமைக்க ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக முதல் தவணையாக ரூ 5.62 கோடியை அளித்துள்ளது. இதன் மூலம் பைப்லைன் அமைக்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படும். அக்டோபர், நவம்பர், டிசம்பரில் பெய்யும் வடகிழக்கு பருவமழையால் கல்யாணி, கைலாசகிரி அணைகளில் தண்ணீரின் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications