"லேகியம்" வாங்க குவிந்த மக்கள்.. என்ன காரணம்.. மூலப்பொருட்கள் என்னென்ன.. கிருஷ்ணாம்பட்டினம் பரபரப்பு
நெல்லூரில் தரப்படும் லேகியத்தில் உள்ள மூலப்பொருட்கள் என்னென்ன
திருமலை: ஒரே நாளில் நெல்லூர் பகுதியில் கொரோனாவுக்கு மருந்து வாங்குவதற்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.. என்ன காரணம்? அந்த ஊரில் கொரோனாவுக்கு தரப்படும் லேகியம் உண்மையிலேயே நோயை குணமாக்குகிறதா? அந்த லேகியத்தில் கலக்கப்படும் மூலப்பொருட்கள் என்ன என்பது குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்துள்ளது கிருஷ்ணாம்பட்டினம் அடுத்துள்ளது முத்துக்கூறு என்ற கிராமம்.. இங்கு கொரோனா பாதித்தவர்களுக்கு 6 வகையான ஆயுர்வேத லேகியம் தயார் செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியானது..
அதுமட்டுமல்ல, தொற்று பாதித்து, அந்த லேகியம் சாப்பிட்ட அனைவருக்குமே நோய் குணமாகிவிட்டதாகவும், அதனால், பக்கவிளைவுகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என்ற செய்திகளம் தீயாய் பரவவும் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்பத்திரி
லட்சக்கணக்கில் ஆஸ்பத்திரிகளில் செலவு செய்து கொண்டும், பல நேரங்களில் ஆஸ்பத்திரிகளில் இடமே இல்லாமல் ஆம்புலன்ஸ்களில் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டு வரும் நிலையில், நெல்லூர் செய்தி மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது.. அதனால், முத்துக்கூறு பகுதி நோக்கி படையெடுத்துள்ளனர்.. இதனால், கூட்டமும் தினம்தோறும் பரவியது.

ஆய்வுக்கு உத்தரவு
இருந்தாலும் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே லேகியம் தயாரித்து வழங்கப்பட்டது.. இந்த தகவல், அந்த மாவட்ட கலெக்டருக்கு தெரியவரவும், அவர் அந்த லேகியத்தை ஆய்வு செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.. அது சம்பந்தப்பட்ட ரிப்போர்ட் வரும் வரை மருந்து வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதன்காரணமாகவே 2 நாட்களுக்கு லேகியம் யாருக்கும் தரப்படாமல் இருந்தது.

சிகிச்சை
ஆனால், நேற்று காலை எம்எல்ஏ காக்கானி கோவர்தன் தலைமையில் மறுபடியும் லேகியம் வழங்குவது தொடங்கப்பட்டது... இந்த விஷயம் கேள்விப்பட்டதும் மறுபடியும் மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த கிராமத்தை நோக்கி படையெடுத்தனர்.. இவர்கள் மட்டுமல்லாது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகளும் ஆம்புலன்ஸ்களில் கிளம்பி வர ஆரம்பித்துவிட்டனர். அதாவது ஒரே இடத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர்.

மக்கள் நெரிசல்
இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரே திணறிவிட்டனர்.. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. இதனால் தொற்று பரவும் ஆபத்தும் ஏற்பட்டது.. மேலும் லேகியம் சம்பந்தமான ரிப்போர்ட்டும் கைக்கு வந்து சேரவில்லை என்பதால், மறுபடியும்லேகியம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.. விஷயம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வரை சென்று அவரும் ஆய்வு நடத்தினார்.. மருத்துவ நிபுணர் குழுவிற்கு ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார். லேகியம் வழங்குவது நிறுத்தப்பட்டாலும், கூட்டம் கூடுவதை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை.

மூலப்பொருட்கள்
தற்போது, அந்த லேகியம் எப்படி தயாராகிறது என்பது குறித்து, அதை தயாரித்து விநியோகிக்கும் ஆனந்தய்யா விளக்கமாக சொல்லி உள்ளார்.. அதில், "என்னுடைய ஆன்மீக குரு பெயர் குருவய்யா சுவாமி.. இவர்தான் என் கனவில் வந்து கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுவோருக்கு இந்த லேகியத்தை தரும்படி சொன்னார்.. அவர் என்ன சொன்னாரோ, அவரது வழிகாட்டுதலின்படியே, இந்த ஆயுர்வேத லேகியத்தை தயார் செய்கிறோம்... வியாபார நோக்கமின்றி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்..

லேகியம்
வேப்பிலை, மா இலை, வால் மிளகு, திப்பிலி, மஞ்சள், ஜாதிக்காய் உள்ளிட்ட பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு இந்த லேகியம் தயார் செய்யப்படுகிறது... இந்த லேகியத்தின் மூலம் கொரோனா வருவதற்கு முன்பும், நுரையீரலை சுத்தம் செய்வதற்கும், வைரல் காய்ச்சல் போன்றவற்றை சரி செய்வதற்கும் உபயோகமாக இருக்கும். அதுமட்டுமல்ல, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தவர்களுக்கும், வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சேர்த்துதான், இந்த 6 வகையான லேகியம் வழங்கப்படுகிறது" என்றார்.

நிபுணர்
எனினும், இந்த லேகியம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. இதைதவிர, மருத்துவ நிபுணர் குழுவிற்கு ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படியும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.. இந்த 2 இடங்களில் இருந்து ரிப்போர்ட் வந்தால்தான், மேற்கொண்டு லேகியம் விநியோகிக்கப்படுவது குறித்து தெரியவரும்..!












Click it and Unblock the Notifications