மழைக்கு ஒதுங்கிய போது நடந்த சோகம்.. திருப்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மழையில் நனையாமல் இருப்பதற்காக ஒதுங்கிய போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொழுமம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே சமுதாய நலக்கூடம் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று காலை வேலைக்கு செல்வதற்காக அதே பகுதியை சேர்ந்த பலர் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்துள்ளனர். லேசான மழை பெய்து வந்ததால், சில பயணிகள் அந்த சமுதாய நலக்கூடத்தில் நின்றுள்ளனர்.

அப்போது திடீரென சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் வேலைக்கு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த முரளி ராஜா, கவுதம், மணிகண்டன் ஆகிய பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 3 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமுதாய நலக்கூடம் பழைய கட்டிடமாக இருந்ததால் அதனை இடித்துவிட்டு புதிதாக கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. திருப்பூர் அருகே பஸ்சுக்காக காந்திருந்த பயணிகள் 3 பேர் சமுதாய நலக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications