திருப்பூர் விவேகானந்தா சேவாலய விடுதியில் கெட்டு போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி
திருப்பூர்: திருப்பூர் அருகே விவேகானந்த சேவாலய விடுதியில் காலை உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே விவேகானந்தா சேவாலயம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி இயங்கி வருகிறது. இங்குள்ள சிறுவர்களுக்கு இன்று காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அந்த உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் பலியாகிவிட்டனர். மேலும் 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் உட்கொண்ட உணவு கெட்டு போயிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

10 முதல் 13 வயது சிறுவர்கள்
இறந்த மாணவர்கள் மூவரும் 10 வயது முதல் 13 வயதுக்குள்பட்டவர்கள். இந்த விடுதியில் போலீஸார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 17 சிறுவர்கள் தங்கியிருந்துள்ளனர். அவர்களில் 14 சிறுவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் , வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

கவலைக்கிடமான சிறுவனும் பலி
காப்பகத்தில் பரிசோதித்த போது அங்கு மாதேஷ், அத்தீஷ் ஆகிய இரு சிறுவர்கள் இறந்துவிட்டனர். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் இருந்த பாபு என்ற சிறுவனை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர் அங்கு உயிரிழந்தார்.

11 சிறுவர்களுக்கு சிகிச்சை
மேலும் 11 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வினித் ஆய்வு நடத்தியிருந்தார். குழந்தைகள் சாப்பிட்ட உணவு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர்கள் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றார்.

காவல் துறை ஆணையர் ஆய்வு
இந்த நிலையில் காவல் துறை ஆணையர் பிரபாகர் விடுதியில் ஆய்வை முடித்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நேற்று காலை மாணவர்களுக்கு இட்லி, சட்னி, வெண் பொங்கல், கொண்டைக் கடலை குழம்பு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட அனைத்து சிறுவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது.

காய்ச்சல்
மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்ததால் நேற்று மதியம் வெறும் ரசம் சாதம் மட்டுமே வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கு காய்ச்சல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து மருத்துவ அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திருப்பூரில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications