நான் அவ்வளவு பேசிய பிறகு அந்த அம்மா கேட்ட கேள்வி இருக்கே.. பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் வேதனை!
திருப்பூர் : ஜெயலலிதா, கருணாநிதிக்காக ஓட்டு போட்டது போதும், இனி எனக்கு வாக்களியுங்கள் என பல்லடத்தில் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
பா.ம.க 2.0 அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், இருவருக்கு மட்டுமே மாறி மாறி வாக்களித்தது போதும், எல்லா தலைவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். மாறி மாறி வாய்ப்பு கொடுங்கள் எனப் பேசியுள்ளார்.
ஜெயலலிதா மரணம்.. ஆறுமுகசாமி அறிக்கை பற்றி ஒரேபோடாக போட்ட அன்புமணி ராமதாஸ்
அன்புமணி பேச்சு
பல்லடத்தில் நடைபெற்ற பாமக 2.0 பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "நம் தேவை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. முதலில் அந்த விழிப்புணர்வு வேண்டும். கட்சி சின்னம் பார்த்து வாக்களிக்கிறோம். நல்ல தலைவரை பார்த்து அல்ல, நல்ல திட்டத்தை பார்த்து அல்ல. சமீபமாக பணத்தை பார்த்து வாக்களிக்கிறார்கள். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றேன். அதிகாரம் பணத்தை மீறி எனக்கு வாக்களித்தார்கள்.
எவ்ளோ தருவீங்க
அதன் பிறகு மீண்டும் தருமபுரியில் வாக்கு கேட்கச் சென்றேன். ஒரு அம்மையாரிடம் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை இலவசமாக தருகிறேன். எல்லோருக்கும் தரமான மருத்துவ வசதி தருகிறேன் என்றேன். ஊருக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்தி தருகிறேன் எனக் கூறினேன். எல்லாம் கேட்டுவிட்டு நல்லது செய்வது ரொம்ப சந்தோஷம் என்றார். எவ்ளோ தருவீங்க எனக் கேட்கிறார்.
குனிந்து கொண்டே இருக்கிறீர்கள்
அதை மாற்றி அமைக்கத்தான் இந்த விழிப்புணர்வு கூட்டம். மொபைல் போனை பார்த்து இளைஞர்கள் தலைகுணிந்து இருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பார்த்தும் அரசியல் விழிப்புணர்வு வரவில்லை. தீபாவளி ரிலீஸ் என்னவென்று தெரிந்தால் மட்டும் போதாது. பிரச்சனைகளை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை யார் மேம்படுத்த இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அன்புமணிக்கு வாய்ப்பு கொடுங்க
55 ஆண்டு காலம் இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அரை நூற்றாண்டுக்கு மேல் ஆட்சி செய்கின்றனர். தமிழக மக்கள் கோபத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என மாறி மாறி ஓட்டு போட்டார்கள். ஜெயலலலிதா, கருணாநிதி ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஓட்டு போடவில்லை. இருவர் மீதும் இருந்த கோபத்தில் மாறி மாறி ஓட்டு போட்டார்கள். இனி அன்புமணி ராமதாஸ் வர வேண்டும் என ஓட்டு போடுங்கள். எல்லா தலைவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். மாறி மாறி வாய்ப்பு கொடுங்கள். அதுதான் இன்றைய தேவை. மீண்டும் மீண்டும் ஒருவருக்கே வாய்ப்பு தராதீர்கள். எனக்குப் பிறகு வரும் தலைவருக்கும் வாய்ப்பு தாருங்கள்.
முதல் கோரிக்கை பாமக
பல்லடம் பகுதி விசைத்தறிகள் அதிகம் உள்ள பகுதி. மின்கட்டண உயர்வால் கோழிப்பண்ணைகள் விசைத்தறிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் கட்டண கணக்கெடுப்பை மாதந்தோறும் கணக்கெடுக்க வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்த கட்சி பாமக. மாதா மாதம் கணக்கெடுத்தால் 45 சதவீதம் மின் கட்டணம் குறையும். திமுக மாதாமாதம் மின் கட்டண கணக்கீடு செய்வதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அமல்படுத்தவில்லை" எனப் பேசினார்.