திமுக நடத்திய மாநாட்டுக்கு உண்மையான காரணமே வேற.. கனிமொழியை சீண்டிய அண்ணாமலை!
திருப்பூர்: திமுக மகளிர் உரிமை மாநாடு அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிலையில், இந்த மாநாடு நடத்தப்பட்டதற்கான காரணம் வேறு என்று கூறி கனிமொழியை சீண்டி உள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் தனது பாதயாத்திரையை திருப்பூர் மாவட்டம் அவினாசி சட்டமன்றத் தொகுதியில் தொடங்கியுள்ளார் அண்ணாமலை. சேவூர் சாலையில் துவங்கிய இந்த பாதயாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை பேச்சு: பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை பேசுகையில், "திமுக ஆட்சிக்கு வந்த பின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகள் புண்படுத்தப்படுவதும் தொடர்கிறது. கோவில்களில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையே கொள்ளை அடிக்கிறது. இதைத் தான் நமது பாரதப் பிரதமர் சமீபத்தில் சுட்டிக்காட்டி பேசினார். 1985-1987 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில், இந்து அறநிலையத்துறை வசமுள்ள கோயில்களுக்கு 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் இப்போது 3.25 லட்ச ஏக்கர் நிலங்களே உள்ளன. 2 லட்ச ஏக்கர் எங்கே போனது?
கோவிலையும், கோவிலின் சொத்துக்களையும் பாதுகாக்க துப்பில்லாத அரசுக்கு கோவிலில் என்ன வேலை? பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் ஆனபிறகு, கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 361 சிலைகள் மற்றும் பழங்கால பொக்கிஷங்கள் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. கோவிலை பாதுகாப்பதை பற்றி பேச நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எல்லா தகுதியும் இருக்கிறது. கோவில் பாதுகாப்பில் கோட்டை விட்ட அறநிலையத்துறை, கோவிலை விட்டு வெளியேற வேண்டும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பாசன மேம்பாட்டிற்காக நமது பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய நிதி 2962 கோடி ரூபாய். அத்திக்கடவு அவிநாசி திட்டம், 65 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் 2019 பிப்ரவரி 28 ல் 1652 கோடி மதிப்பில் திட்டம் பூமி பூஜை போடப்பட்டு 02-05-2021 வரை 16 மாதத்தில் 83% பணிகள் நிறைவடைந்தது. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த 28 மாதங்களில், மீதமுள்ள 17% பணிகள் முடிக்கப்படாமல், மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
தமிழக நெசவாளர்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, நெசவாளர்களுக்குத் தனி கூட்டுறவு வங்கி, விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து அரசுப் பள்ளி சீருடை கொள்முதல், அரசு நூல் கொள்முதல் நிலையம், அதுமட்டுமல்லாது, திருப்பூர் மாவட்டத்திற்கு திமுக கொடுத்த வாக்குறுதிகளான, திருப்பூரில் கழிவு அகற்றும் பொதுவான சுத்திகரிப்பு வசதி, திருப்பூரில் சிறப்பு மின் வழித்தடம், திருப்பூரில் வர்த்தக மையம், திருப்பூரில் ESI மருத்துவமனைகள் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக.

கனிமொழி திட்டம்: கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் திமுக ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பெண் தலைவர்களை அழைத்து வந்து மகளிர் உரிமை மாநாடு என நடத்தி இருபக்கின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டிருந்தார். பிரதமர் மோடி 33 சதவீத இட ஒதுக்கீட்டில் முதல் தலைமுறை பெண்கள் அரசியலுக்கு வருவதை விரும்புகிறார். குடும்ப அரசியலை நடத்தி வரக்கூடிய கனிமொழி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்காக அல்ல.
இந்த மாநாடு நடத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் வேறு. சனாதனம் குறித்து பேசியதன் காரணமாக இந்தியா முழுவதும் எதிர்வினையாற்றியதால் பிரபலமடைந்த உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சியை கண்டு தானும் பிரபலமடைய வேண்டும் என கனிமொழியால் நடத்தப்பட்ட ஒரு மாநாடு தான் சென்னையில் நடத்தப்பட்ட மகளிர் உரிமை மாநாடு. வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். பாஜகவிற்கு மீண்டும் வாய்ப்பளிப்பார்கள்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications