பேனர் அக்கப்போர்; எல்லாமே அவசரம்; மே 2-க்கு முன்பே அதிமுக வேட்பாளரை MLA-வாக்கிய காங்கேயம் ர.ர.க்கள்!
திருப்பூர்: சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அதிமுக வேட்பாளர் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக பேனர் வைத்துள்ள கூத்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரங்கேறியுள்ளது.
காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் ராமலிங்கம் முருகவேல் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் களம் கண்டார்.

இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையான போட்டியை கொடுத்தனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து தற்போது தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் சூழலில், காங்கேயம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று அதிமுகவினரின் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
பழையக்கோட்டை ஊராட்சி அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில், அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றிபெற்றுவிட்டார் என்று கூறியிருந்தால் கூட அதில் ஓரளவு லாஜிக் இருந்திருக்கும். ஆனால், 13, 483 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என குறிப்பிடப்பட்டது தான் இப்போது பூதாகரமாகியுள்ளது.
ஏற்கனவே வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மர்ம நபர்கள் நடமாடுவதாகவும், கணினி நிபுணர்கள் வந்து செல்வதாகவும் திமுகவினர் தமிழகமெங்கும் புகார் கூறி வரும் வேளையில், காங்கேயம் அதிமுக வேட்பாளர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் திமுகவினரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதில் இன்னொரு முக்கிய விவகாரம் என்னவென்றால் சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ள வேண்டிய எண் என்று கூறி அதில் ஒரு அலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த பேனர் விவகாரத்தை திமுக தரப்பு தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications