பழனிசாமி அவர்களே.. இது மட்டும் நடந்தா உள்ளதும் போயிடும்.. ஜாக்கிரதை! எடப்பாடிக்கு ஸ்டாலின் வார்னிங்!
திருப்பூர்: சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் வந்தால் அதிமுகவுக்கு உள்ளதும் போய்விடும், பழனிசாமி ஜாக்கிரதை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவை மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கிப் பேசினார். மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசையும், அதிமுகவையும் கடுமையாக விளாசினார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திறனற்ற பாஜக தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்க கூடாத திறனிழந்த கட்சி. அடிமை அதிமுகவை அச்சுறுத்தி கூட்டணியில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சண்டை போடுவது போல் வெளியில் நடிக்கிறார்கள். ஆனால் உள்ளே நட்பாக இருக்கிறார்கள். அதிமுகவை ஆதரித்தால் அவர்களின் ஊழல்களுக்கு பாஜக பொறுப்பேற்க வரும், பாஜகவின் மதவாதத்திற்கு அதிமுகவும் துணை போக வேண்டி வரும்.
'போடு தோப்புக்கரணம்' என்று சொன்னால், 'இந்தா எண்ணிக்கோ' என்று சொல்லிக்கொண்டே தோப்புக்கரணம் போடக்கூடிய கட்சிதான் அதிமுக. இவ்வுளவு சண்டை நடந்தபோதும் எடப்பாடி பழனிசாமி காப்பாற்றுங்கள் என்று காலில் விழத்தான் தனியாக சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தார். ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வருகிறது, காப்பாற்றுங்கள் என்று காலில் விழ சென்றாரா? கொடநாடு வழக்கில் இருந்து நழுவிடப் சென்றாரா? எதற்காக தனியாக சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தார்?
இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஒன்றிய அமைச்சர்களை திடீர் என்று சந்தித்தார்களே? சென்னையில் இருந்து சென்றால் தெரிந்துவிடும் என்று, கொச்சியில் இருந்து சென்ற மர்ம சந்திப்புகளுக்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன? ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தின் நன்மைக்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு மூலமாக, தமிழ்நாட்டுக்கு அதிமுக கொண்டு வந்த நன்மை என்ன? எதுவும் இல்லை.

இந்த லட்சணத்தில் ஒரே நாடு - ஒரே தேர்தலை குப்புற விழுந்து ஆதரிக்கிறார் பல்லக்குத் தூக்கி பழனிசாமி. நன்றாக இருக்கிறதல்லவா இந்தப் 'பல்லக்குத் தூக்கி பழனிசாமி' பட்டம்? என்ன அருகதையில் தமிழ்நாட்டு மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று பழனிசாமி பகல் கனவு காண்கிறார்? பழனிசாமி அவர்களே! சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் வந்தால், உங்கள் கட்சி இப்போது இருக்கும் நிலைமைக்கு உள்ளதும் போய்விடும், ஜாக்கிரதை!
பா.ஜ.க.வின் பாசிச திட்டங்கள் எல்லாவற்றிகும் ஆட்சியில் இருந்தபோது தலையாட்டிவிட்டு, இன்றைக்கு பா.ஜ.க.வை எதிர்க்கின்ற மாதிரி மக்களிடம் காட்டிக்கொண்டு, மறைமுகமாக பா.ஜ.க தலைவர்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் கொத்தடிமைக் கூட்டத்திற்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போலவே இந்தத் தேர்தலிலும் படுதோல்வியை பரிசாகத் தர வேண்டும்.” எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications