நான் சாமானியன்.. என்கிட்ட வாட்ச் பில் கேட்குறாங்க! திமுகவினர் சொத்து விவரத்தை வெளியிடபோறேன்-அண்ணாமலை
திருப்பூர்: சாமானியனான என்னிடம் வாட்சுக்கு பில் கேட்டுட்டீங்கல்ல, முதல்வர், எம்எல்ஏ உள்ளிட்டோரின் கோடிக்கணக்கான சொத்து கணக்கை தனித்தனியாக வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் கோவில்வழியில் அண்ணாமலை பேசுகையில் தமிழகத்தில் இன்றைய முக்கிய பிரச்சினையே ஊழல். சாமானிய மனிதரிடம் பில் கேட்கிறார்கள். ஆவின் நிறுவனத்தின் ஆரஞ்ச் நிறத்தின் பால் விலை ஏறியுள்ளது.
லிட்டருக்கு 12 ரூபாய் உயர்ந்துள்ளதால் அந்த பாலை மக்கள் வாங்க முடியவில்லை. இதனால் நாளொன்றுக்கு ஆரஞ்ச் பால் விற்பனை 5 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. ப்ளூ பாக்கெட் வாங்கலாமே என நீங்கள் கேட்கலாம்.

ஆரஞ்ச் பாக்கெட்
ஆரஞ்ச் பாக்கெட் பாலில் இருப்பதை போன்று ப்ளூ பாக்கெட்டில் புரதச் சத்துகளும் கொழுப்பு சத்துகளும் இல்லை. ஏழை எளிய மக்களின் குழந்தைகள் ஆரஞ்ச் நிற பாக்கெட் பாலை உண்டால்தான் சத்தாக இருப்பர். குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் மிகவும் முக்கியமானது.

36 லட்சம் லிட்டர் விற்பனை
கடந்த ஆண்டு பால் 36 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு விற்பனை குறைந்துள்ளது. வாட்சின் பில் மட்டுமல்ல எல்லா விவரங்களையும் வெளியிடுவேன். மாதா மாதம் நான் செய்த செலவு விவரங்களையும் வெளியிடவுள்ளேன். நான் போலீஸ் வேலையில் சேர்ந்த நாள் முதல் இதுவரை சேர்த்த எனது பணத்தை காட்ட தயார்.

முதல்வர்
முதல்வர், எம்எல்ஏ, அவரது உறவினர்களின் சொத்து பட்டியலை தனித்தனியாக வெளியிடுவேன். ஆளும் கட்சிக்கு மாற்று பாஜகதான் என மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஊழல் தொடர்பாக புகார்களை பொதுமக்கள் அளிக்கலாம். இதற்காக செயலி, இணையதள முகவரி, டோல்ப்ரீ எண் உள்ளிட்டவை இன்னும் ஒரு மாதத்தில் உருவாக்கி தரப்படும்.

பினாமிகள்
அதன் மூலம் திமுக அமைச்சர்களின் பினாமிகளால் பறிக்கப்பட்ட நிலங்கள் குறித்த தகவல்களை அளிக்கலாம். இந்த அமைச்சர் என்னிடம் இருந்து நிலத்தை பறித்துவிட்டார் என செயலியில் புகார் கொடுத்தால் போதும். அந்த பொதுமக்களின் பெயரோ முகவரியோ எங்களுக்கு வேண்டாம். எங்கள் குழு அதை ஆய்வு செய்து உண்மையாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்போம். நான் ஏப்ரல் மாதம் வெளியிடும் சொத்து பட்டியல் உள்ளிட்டவற்றில் இந்த பினாமிகள் பறித்த நிலங்கள் தொடர்பாகவும் வெளியிடுவோம். அதனால் செந்தில் பாலாஜி அண்ணனுக்கு வாட்ச் பில் மட்டுமில்லை, திமுகக்காரர்களின் சொத்து கணக்கை, மொரீஷியஸுக்கு கை மாறிய பணம் குறித்த கணக்கையும் சேர்த்து கொடுத்துடுவோம். என அண்ணாமலை பேசியிருந்தார்.

பின்னணி என்ன
அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் வெளிநாட்டு வாட்ச் என்றும் அது 3.5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை மறுத்த அண்ணாமலை அந்த வாட்ச் ரபேல் வாட்ச் என தெரிவித்துள்ளார். இதற்கான ரசீதை வெளியிடுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுள்ளார். ஆனால் அண்ணாமலையோ தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போகிறேன். அன்றைய தினம் எல்லா கணக்குகளையும் வெளியிடுவேன் என அறிவித்துள்ளார். ஆனாலும் விடாத செந்தில் பாலாஜி வாட்ச் பில் கொடுத்தால் போதும், சம்பள கணக்கு சாம்பார் கணக்கெல்லாம் எங்களுக்கு தேவையில்லை என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications