ஒதுக்கப்படும் ஓபிஎஸ்! தேவரினமே விழித்துக் கொள்! திருப்பூரில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்கள்
திருப்பூர்: அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் ஒதுக்கப்படுவதாக கூறி தேவரினமே விழித்துக் கொள் என்ற பெயரில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அன்று டிடிவி தினகரன்.. பின்று சசிகலா.. இன்று ஓபிஎஸ் என்று அச்சிடப்பட்டுள்ள வாசகமும் போஸ்டரில் முத்துராமலிங்கத் தேவர் படமும் இடம்பெற்றுள்ளன.
ஓபிஎஸ் வீட்டில் திடீர் மாற்றம்.. யாரும் அந்த இடத்துக்கு வர முடியாது.. எடப்பாடிக்கு மறைமுக மெசேஜ்?
கட்சிக்கு அப்பாற்பட்டு சமுயாத அமைப்பினர் சார்பில் ஒபிஎஸ்க்கு ஆதரவாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
போஸ்டர் அரசியல்
அதிமுக பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்பட்டது, அன்று முதலே போஸ்டர் அரசியல் தமிழகத்தில் அனல் பறக்கிறது. ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்ததை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே பவர் பாலிடிக்ஸ் நடைபெற்று வருகிறது. இருவரும் மாறி மாறி ஆலோசனை நடத்தி கட்சியை கைப்பற்ற முனைப்புக் காட்டி வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே அணி திரண்டு நிற்கிறார்கள்.
பரபரப்பு போஸ்டர்
அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி வைப்பதற்கான முயற்சிகளிலும் சிலர் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கொங்கு மண்டலத்தில் முக்கிய மாவட்டமான திருப்பூரில், தேவரினமே விழித்துக்கொள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளது. ''அன்று டிடிவி தினகரன்.. பின்று சசிகலா.. இன்று ஓபிஎஸ்'' என்ற மூன்று வரிகள் மட்டுமே அந்த போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது.
சமுதாய அமைப்புகள்
அதாவது தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு அதிமுகவில் மரியாதை இல்லை என்றும் வரிசையாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்றும் பொருள்படும் படி அதில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. சசிகலா ஓரங்கட்டப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே தேவர் சமுதாய அமைப்புகள் அதிமுக தலைமை மீது கடும் கோபத்தில் இருந்து வரும் நிலையில் இப்போது ஓ.பி.எஸ்.சும் ஓரங்கட்டப்பட்டால் சமுதாய ரீதியாக எதிர்ப்பும் அதிருப்தியும் இன்னும் அதிமுக தலைமை மீது அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
இரண்டில் ஒன்று
அதிமுகவில் தற்போது இரட்டை தலைமை உள்ள நிலையில் அதனை விரும்பாத எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவில் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு உள்ளது. இதனை எப்படி சமாளிக்கப் போகிறது ஓபிஎஸ் தரப்பு என்பது தான் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.