ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு.. மார்ச் 31 வரை டைம்.. கலெக்டர் தகவல்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்.) மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்.) பெற்றுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகைகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இதுவரை பதிவு செய்யாத 14 சதவீதம் பேர் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குடும்ப அட்டை வைத்துள்ள பலர் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யாமல் இருக்கிறார்கள்.. யார் பொருள் வாங்குகிறார்களோ.. அவர்கள் மட்டுமே தொடர்ந்து கைரேகை வைத்து வருகிறார்கள். அதேநேரம் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் யாருமே கைரேகை வைத்து பொருள் வாங்கியிருக்க மாட்டார்கள். ஏன் கைரேகையோ இதுவரை பதிவு கூட செய்திருக்க மாட்டார்கள்.. அப்படி கைரேகை பதிவு செய்யாதவர்கள் கண்டிப்பாக தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ரேஷன் பொருட்கள் விநியோகம் எத்தனை பேருக்கு வழங்கப்படுகிறது என்பதை கண்காணிக்கவும், அந்த செயல்முறை பின்பற்றப்படுகிறது. அதாவது குடும்ப உறுப்பினர்கள் ஒரு ரேஷன் கார்டில் எத்தனை பேர் உள்ளார்களோ, அத்தனை பேரும் கைரேகையை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கான ரேஷன் பொருட்கள் செல்வதை மத்திய மாநில அரசுகாளல் உறுதி செய்ய இந்த நடைமுறை பின்னப்படுகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்.) மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்.) பெற்றுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகைகள் பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 86 சதவீதம் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகைகள் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு முடிந்தன.
மீதம் உள்ள 14 சதவீதம் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை, ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனைய எந்திரத்தில் பதிவு மேற்கொள்ளப்படாமல் உள்ளன. எனவே தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏ.ஏ.ஒய். மற்றும் பி.எச்.எச். ரேஷன் கார்டுதாரர்கள் அவர்களின் குடும்பத்தில் கைவிரல் ரேகை பதிவு விடுபட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அருகே உள்ள ரேஷன் கடைக்கு சென்று வருகிற 31-ந் தேதிக்குள் விரல் ரேகை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமல்ல, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, சென்னை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏ.ஏ.ஒய். மற்றும் பி.எச்.எச். ரேஷன் கார்டுதாரர்கள் அவர்களின் குடும்பத்தில் கைவிரல் ரேகை பதிவு விடுபட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அருகே உள்ள ரேஷன் கடைக்கு சென்று விரல் ரேகை பதிவேற்றம் செய்து கொள்வது நல்லது. முன்னதாக ஆதார் கார்டு இணைக்கப்படாத குழந்தைகளின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட்டது. பலரும் இது பற்றி முறையிட்ட நிலையில் ஆதார் கார்டுடன் மீண்டும் குடும்ப உறுப்பினர்களின் பெயரை சேர்க்குமாறு கோரிக்கை வைத்த பின்னரே ஏற்கப்பட்டது.
எனினும் தற்போதைய நிலையில் ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைவரும் தங்கள் கைரேகையை பதிவு செய்யாவிட்டால் பொருட்கள் வழங்கப்படாது என்றோ அல்லது ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றோ தகவல்கள் பரவினால் நம்ப வேண்டாம்.. ஏனெனில் அது முற்றிலும் பொய் ஆகும். அதேநேரம் ரேஷன் கார்டில் கைரேகை வைப்பது கட்டாயம் என்று மட்டும் அரசு அறிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் வயதானவர்கள், கட்டட தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பலரும் கைரேகை இன்னும் வைக்கவில்லை.. தேர்வு காரணமாக மாணவ மாணவிகள் இன்னும் கைரேகை வைக்கவில்லை.. வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வேலை செய்பவர்களுக்கு தற்போது சிக்கல் இருக்கிறது என்பது உண்மை. கைரேகை பதிவு செய்வது நல்ல நடைமுறை என்றாலும், எந்த ஊர் ரேஷன் கடைகளிலும் கைரேகை வைக்கலாம் என்று அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications