குட்டையை மூடியாச்சு.. கரும்பு தோட்டம், வயல்.. மக்கள் போராட்டம்.. இடமின்றி தவிக்கும் சின்னத்தம்பி
சின்னதம்பி யானையை விரட்டக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளனர்.
Recommended Video

திருப்பூர்: ஒரு பக்கம் போராட்டம், இன்னொரு பக்கம் மறியல் என மக்களின் எதிர்ப்புக்கு இடையே நெல் வயல்களுக்குள் சின்னதம்பி தவித்து வருகிறான்.
உடுமலையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமராவதி சர்க்கரை ஆலை வளாகம் உள்ளது. இந்த ஆலைக்கு சொந்தமான பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணைக்குள் கழிவுநீர் குட்டை இருக்கிறது.
கடந்த 6 நாளாக சின்னதம்பி இந்த குட்டையில்தான் படுத்து கிடந்தான். கொஞ்ச நேரம் படுப்பது, பிறகு எழுந்து வந்து கரும்பு சாப்பிட்டுவிட்டு திரும்பவும் போய் குட்டையில் படுத்துக்கொள்வது என்றே இருந்தான்.

ஆக்ரோஷம்
இந்நிலையில், நேற்று முன்தினம் குட்டையில் தேங்கி இருந்த சர்க்கரை ஆலையின் கழிவுநீர் முழுவதையும் வனத்துறையினர் அகற்றினர். இவ்வளவு நாள் சொகுசாக வெயிலுக்கு இதமாக குட்டைநீர் இருந்தது. இப்போதும் அந்த குட்டையும் மூடப்பட்டுவிட்டதால், சின்னதம்பி ஆக்ரோஷமாகிவிட்டது.

ஆலோசனை
உடனே பக்கத்தில் இருந்த கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்தோர் சின்னதம்பியை விரட்டியடிக்கவும் அமராவதி சர்க்கரை ஆலை பண்ணை பகுதிக்கு சின்னதம்பி வந்துவிட்டான். அந்த நேரம் பார்த்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.

நெல் வயல்கள்
திடீரென்று அங்கு வந்த சின்னதம்பியை பார்த்ததும், அனைவரும் பண்ணை காவலாளியின் ரூமுக்குள் ஓடினர். இதனால் கொஞ்ச நேரத்துக்கு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அருகிலிருந்த நெல் வயலுக்குள் சின்னதம்பி நுழைந்துவிட்டது.

போராட்டம்
விளைநிலங்களில் உள்ள பயிர்களை சின்னதம்பி சேதப்படுத்துவதாக சொல்லி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, "என்னைக்கு சின்னதம்பி ஆலை பகுதிக்கு வந்ததோ, அன்றிலிருந்து எங்கள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப முடிவதில்லை, அதனால் பண்ணையில் முகாமிட்டுள்ள சின்னதம்பியை விரட்ட வேண்டும்" என்று ஆலை ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தவித்து வருகிறான்
குட்டையை மூடாமலிருந்தால் சின்னதம்பி கரும்பு தோட்டம், விளைநிலங்கள் என்று சென்றிருக்க வாய்ப்பில்லை. போராட்டம், மறியல் இடையே தங்க இடமின்றி நெல் வயல்களுக்குள் புகுந்து சின்னதம்பி தவித்து வருகிறான்.












Click it and Unblock the Notifications