காங்கேயம் நகராட்சி தலைவர் பிடிவாதம்! திமுகவிலிருந்து கட்டம் கட்டிய தலைமை! முழு பின்னணி!
திருப்பூர்: காங்கேயம் நகர திமுக இளைஞரணி அமைப்பாளரும், நகராட்சி தலைவருமான சூர்யபிரகாஷை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.
காங்கேயம் நகர்மன்ற தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், மறைமுகத் தேர்தலில் போட்டி வேட்பாளராக களமிறங்கிய சூர்ய பிரகாஷ் சேர்மனாக வெற்றிபெற்றார்.
இதையடுத்து நகர்மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சூர்ய பிரகாஷிடம் கட்சி மேலிடம் அறிவுறுத்தியும் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ள முன்வரவில்லை.

நகராட்சி தேர்தல்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று 21 மாநகராட்சிகள் மற்றும் பெருவாரியான நகராட்சிகள், பேரூராட்சிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஒரு மேயர் பதவியிடம் வழங்கிய திமுக கூட்டணியில் இடம்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மதுரை மற்றும் திருப்பூரில் துணை மேயர் பதவியிடங்கள் வழங்கின. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருந்தது திமுக தலைமை.

ராஜினாமா இல்லை
கடந்த மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் திமுக கவுன்சிலரும், காங்கேயம் நகர திமுக இளைஞரணி அமைப்பாளருமான சூர்ய பிரகாஷ் நகராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். இது கூட்டணிக்குள் குழப்பத்தையும், தர்ம சங்கடமான சூழலையும் ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் சூர்ய பிரகாஷை ராஜினாமா செய்துவிட்டு தலைமை அறிவித்தப்படி காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்து கூட்டணி தர்மத்தை காக்குமாறு கேட்டிருக்கிறார்.

காங்கிரஸ் புகார்
இதனிடையே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார். ஆனாலும் சூர்ய பிரகாஷ் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், உள்ளூர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இது தொடர்பாக தொடர்ந்து கே.எஸ்.அழகிரியிடம் புகார் தெரிவித்ததன் எதிரொலியாக அவரும் இந்த விவகாரத்தை அறிவாலயம் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

முரசொலியில் அறிவிப்பு
இதையடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் கட்சி நாளிதழான முரசொலியில் சூர்ய பிரகாஷ் உட்பட தேனி, நீலகிரி மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 5 நிர்வாகிகளை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் சஸ்பெண்ட் செய்வதாக அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications