அமைச்சர் சாமிநாதன் போட்ட போன்! 24 மணி நேரத்தில் ஊருக்கு வந்த அரசுப்பேருந்து! பள்ளி மாணவர்கள் ஹேப்பி!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்தில் புதிய பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துங்காவி ஊராட்சியில் உள்ள மலையாண்டி பட்டினத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இதனிடையே மலையாண்டி பட்டினம் கிராமத்துக்கு சென்றிருந்த மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணனிடம், தங்கள் ஊருக்கு பேருந்து வசதி செய்து தரக் கோரி மாணவர்களும், திமுக கிளை நிர்வாகிகளும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
அப்படியா அமைச்சரிடம் சொல்லி செய்துவிட்டால் போது, என்ற உறுதியை கொடுத்துவிட்டு வீடு திரும்பிய ஜெயராமகிருஷ்ணன், இந்த விவரத்தை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். பள்ளிக்கு செல்ல மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்த அமைச்சர் சாமிநாதன், ஆன் தி ஸ்பாட்டிலேயே அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு போன் போட்டு பள்ளி மாணவர்களுக்கு காலை மாலை நேரங்களில் பேருந்து வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

அமைச்சர் சாமிநாதன் உத்தரவைத் தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மலையாண்டிபட்டிணம் கிராமத்திற்கு அரசு பேருந்து சென்றதால் அப்பகுதி பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஆரவாரம் செய்து வரவேற்றுள்ளனர். அண்மையில் குடிநீர் குழாய் குறித்த கோரிக்கை மனு மீது அரை மணி நேரத்தில் தீர்வு வழங்கியிருந்தார் அமைச்சர் சாமிநாதன்.
இப்போது 24 மணி நேரத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்துக் கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார். இத்தனைக்கும் மடத்துக்குளம் தொகுதி தற்போது அதிமுக வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications