பல்லடத்தில் நடந்த பயங்கரம்.. வடமாநில தொழிலாளி பீர் பாட்டிலால் குத்தி படுகொலை
திருப்பூர்: பல்லடம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வடமாநில தொழிலாளி பீர் பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தலைமறைவான வடமாநில தொழிலாளியை பல்லடம் போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கே.அய்யம்பாளையம் பகுதியில் பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான பேவர் பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.
இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட தமிழகம் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வீர்சந்த், ராம்குமார் இருவரும் ஒரே அறையில் தங்கி அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் அதிர்ச்சி
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிக்கு வந்த பொழுது அங்கு வீர்சந்த் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை அடுத்து உரிமையாளர் பத்மநாபனுக்கும், பல்லடம் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.

கொலை எப்படி
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர் வீர்சந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ராம்குமாரிடம் வீர்சந்த் 5ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியிருந்ததும், நேற்று இரவு இருவரும் மது அருந்திக் கொண்டிருந்த பொழுது ராம்குமார் அந்த பணத்தை கேட்டதும் தெரிய வந்தது.

பீர்பாட்டிலை எடுத்து குத்தினார்
அப்போது வீர்சந்த் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை வீர்சந்தின் தலையில் உடைத்து வயிற்றில் குத்தி உள்ளார்.இதில் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே வீர்சந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் தேடுதல்
இதனை அடுத்து ராம்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்லடம் காவல் துறையினர் தலைமறைவான ராம்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications