பென்ஷன் எப்போது? தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டமும் இல்லை, இப்ப இது வேறயா? பரபர புகார்
திருப்பூர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்காத வருத்தத்தில் அரசு ஊழியர்கள் உள்ள நிலையில், கடந்த, 2021 தேர்தலில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில், 309 முதல், 319 வரையிலான கோரிக்கை மீது உத்தரவாதம் அளித்தும், அதையும் நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.. நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு கடைசி நேரத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய குழுவை அமைத்து, கருத்துக்கேட்பு நடத்தியிருக்கிறார்கள் என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுசெயலர் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள்..

பழைய பென்ஷன் திட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், அதை ஏற்காமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், தமிழகத்தில் சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்வதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன், அந்த குழுவினர் ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் மயில் செய்தியாளர்களிடம் பேசும்போது, பழைய ஓய்வூதிய திட்டம்தான் வேண்டும். வேறு எந்த திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதற்காக போராட்டங்களை நடத்தி வருகிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.
இத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவிடம் இருந்து அரசு அறிக்கை பெற்று, திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக எந்த திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதிபட கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
திருப்பூர் மாநில செயற்குழு
இந்நிலையில், அரசு ஊழியர் சங்கத்தின், மாநில செயற்குழு முடிவுப்படி, நவம்பர் 8ம் தேதி, 16வது மாநில பிரதிநிதித்துவ பேரவை திருப்பூரில் நடைபெற உள்ளது..
இதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம், திருப்பூரில் நேற்றைய தினம் நடந்தது.. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுசெயலாளர் சீனிவாசன், செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தபோது, ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார்..
அதில், கடந்த, 2021 சட்டசபைத் தேர்தலில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில், 309 முதல், 319 வரையிலான கோரிக்கை மீது உத்தரவாதம் அளித்திருந்தனர். அதை நிறைவேற்ற வலியுறுத்தி, பிரதிநிதித்துவ பேரவை நடத்துகிறோம்.
நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு கடைசி நேரத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய குழுவை அமைத்து, கருத்துக்கேட்பு நடத்தியுள்ளனர். ஏற்கனவே உத்தரவாதம் அளித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
அதிகாரிகளின் அச்சுறுத்தல்
அரசுத்துறை வாரியாக, அதிகாரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. வேளாண் துறை இயக்குநர், அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசி புண்படுத்தியுள்ளார். இதேபோல், பட்டுவளர்ச்சித் துறை, தொழிலாளர் துறை போன்ற சில துறைகளில் அச்சுறுத்தும் நடவடிக்கை தொடர்கிறது. திண்டிவனம் நகராட்சியில், ஊழியர் ஒருவரை, கவுன்சிலர் காலில் விழ வைத்திருக்கிறார்கள்.. இதுதான், திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதியா?
தமிழக அரசின் அறிவிப்பும், செயல்பாடும், அதிகாரிகளின் அணுகுமுறையும், முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாநில பிரதிநிதித்துவ பேரவை அமையும். அதற்காக, முன்னாள் ஆட்சியாளர்கள், எங்கள் போராட்டத்தை தன்வசப்படுத்த இடம் கொடுக்க மாட்டோம். கோரிக்கை நிறைவேறும் வரை, எவ்வித சமரச போக்கும் இருக்காது. பேரவைக்கு முன்னதாக, நிர்வாகிகளை அழைத்து பேசி, கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications