திருப்பூரில் தேங்காய் எண்ணெய்யுடன் லாரி கடத்தல்.. பிரபல ஆயில் மில் உரிமையாளர் அதிரடியாக கைது
திருப்பூர்: அனிபா என்பவர் டேங்கர் லாரிகளை சொந்தமாக வைத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் ஆலைகளில் இருந்து தேங்காய் எண்ணெய்யை மொத்தமாக வாங்கி கேரளாவில் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான லாரி, திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், வணிக வரித்துறை அதிகாரி போல் நடித்து 11,5 டன் தேங்காய் எண்ணெய்யுடன் டேங்கர் லாரியை கடத்தினார்கள். இந்த விவகாரத்தில் பிரபல ஆயில் மில் உரிமையாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், உடுமலை, பல்லடம் என பல்வேறு பகுதிகளில் ஏராளமான எண்ணெய் ஆலைகள் செயல்படுகின்றன. குறிப்பாக காங்கயம் பகுதியில் ஏராளமான எண்ணெய் கம்பெனிகள் இயங்குகினற்ன. இங்கு கேரளாவை சேர்ந்த 45 வயதாகும் அனிபா என்பவர் டேங்கர் லாரிகளை சொந்தமாக வைத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் ஆலைகளில் இருந்து தேங்காய் எண்ணெய்யை மொத்தமாக வாங்கி கேரளாவில் விற்கும் தொழில் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் அனிபாவுக்கு சொந்தமான லாரி நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் ஆயில் மில்லிற்கு வந்து தேங்காய் எண்ணெயை ஏற்றி கொண்டு கேரளாவுக்கு திரும்பி சென்றது. லாரியை 58 வயதாகும் சுரேஷ் என்பவர் ஓட்டினார்.
இந்த லாரி காங்கயத்தை அடுத்த சாவடிபாளையத்தில் வந்தபோது ஓட்டுனர் சுரேஷ் டீ குடிக்க லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு ஒருகார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து 5 பேர் வேகமாக இறங்கினார்களாம். அந்த கும்பல் தங்களை வணிக வரி அதிகாரிகள் எனக்கூறி லாரியிலுள்ள தேங்காய் எண்ணெய்க்கு இன்வாய்ஸ் பில்லை கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் 11.5 டன் எடையுள்ள தேங்காய் எண்ணெய் லோடு லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.
அப்போதுதான் அவர்கள் வணிக வரித்துறை அதிகாரிகள் இல்லை என்பது டிரைவர் சுரேஸ்க்கு தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் சுரேஷ் உடனடியாக காங்கயம் போலீசாருக்கும், காங்கயத்தில் உள்ள தனியார் மில் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் வணிக வரித்துறை அதிகாரி என கூறி ஏமாற்றி லாரியை கடத்தி சென்றவர் காங்கயம் பகுதியில் இயங்கி வரும் பிரபல ஆயில் மில்லின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி என்பதும் அவருடன் வந்தவர்கள் அவரது மில்லில் வேலை பார்க்கும் மணிஅரவிந்த், ராஜசேகர், மணிகண்டன் மற்றும் மயில்சாமி என்பதும் தெரியவந்தது.
மேலும் டேங்கர் லாரி கிருஷ்ண மூர்த்தி ஆயில் மில்லில் நிறுத்தி வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கேரள லாரி உரிமையாளர் அனிபா மற்றும் ஓட்டுனர் சுரேஷ் என்பவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆயில் மில் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மணிஅரவிந்த், ராஜசேகர், மணிகண்டன், மயில்சாமி ஆகியோரை கைது செய்து, லாரியை மீட்டனர். பின்னர் அவர்களை காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications