வேலைக்கு ஆகாத அறநிலையத்துறை...மீண்டும் சர்ச்சையை கிளப்பும் எச்.ராஜா
திருப்பூர்: அறநிலையத்துறை உடனடியாக தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களை விட்டு வெளியேற வேண்டும். இனியும் அவர்கள் கோவில்களை நிர்வகிக்க அனுமதிக்க முடியாது. அதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம் என திருப்பூரில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று பாஜகவின் எச். ராஜா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். புராதான கோவில்களை அறநிலையத்தை சரியாக பராமரிக்கவில்லை என்று எச் ராஜா விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நெருப்பெரிச்சல் மண்டல பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.

வேக்சின்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் விரைவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்தியாவில் வேகமாக கொரோனா வேக்சின் செலுத்தப்பட்டு வருகிறது. வளர்ந்த நாடுகளை விட வேகமாக நாம் வேக்சின் செலுத்தி வருகிறோம். அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளால் முடியாததை பிரதமர் மோடி செய்திருக்கிறார்.

நலத்திட்டம்
தமிழகத்தில் தடுப்பூசி முகாம்களில் மத்திய அரசால் இலவசமாக வழங்கப்பட்ட தடுப்பூசி என விளம்பரப் பதாகை வைக்க வேண்டும். மத்திய அரசு இலவசமாக கொடுத்த வேக்சின் அது. எனவும் அதேபோல் ரேஷன் கடைகளிலும் மத்திய அரசின் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் அரிசி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.

தங்கம்
அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் இருந்து தங்கத்தை எடுக்கும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. தங்கத்தை உருக்கும் திட்டம் குறித்த அரசாணை அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப் படவில்லை. இதில் எதுவும் வெளிப்படையாக நடக்கவில்லை. அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள கோவில்களை பராமரிக்க திறமையற்ற துறையாக உள்ளது.

அறநிலையத்துறை
அறநிலையத் துறையில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வேறு துறைகளுக்கு இடமாற்றப்பட வேண்டும். அறநிலையத்துறையின் கீழ் உள்ள 20 சதவீத கோயில்கள் பராமரிப்பில்லாமல் பயன்பாடற்று உள்ளன. இந்நிலையில் புதிய கோவில்களை கையகப்படுத்துவதை அறநிலையத்துறை கைவிட வேண்டும்.

மாற்ற வேண்டும்
அதேபோல் அறநிலையத்துறையின் கீழ் கட்டப்படும் கல்லூரிகளில் மதக் கல்வி மட்டுமே நடத்தப்பட வேண்டும். வேறு விதமான பாடங்களை எடுக்க கூடாது. இந்து மதம் சார்ந்த கல்விகளை மட்டுமே இங்கு கற்பிக்க வேண்டும்.
கோவில் நிர்வாகத்தை அவர்கள் கைவிட வேண்டும். உடனடியாக ஆலயங்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும். நாங்கள் அதற்கான பணிகளை செய்து வருகிறோம், என்று திருப்பூரில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications