கோட்சே வீரவணக்க நாள் நடத்திய திருப்பூர் சிவசேனா- தமிழகத்தில் தொடரும் சர்ச்சை!
திருப்பூர்: தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அடிகளை படுகொலை செய்ததால் தூக்கிலிடப்பட்ட இந்துத்துவவாதி நாதுராம் கோட்சே நினைவு நாளை திருப்பூர் சிவசேனா கட்சியினர் வீரவணக்க நாளாக நடத்தி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் நாதுராம் கோட்சே 1949-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தின் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டார். தேசத்தின் தந்தை காந்தியடிகளை கொலை செய்தவர் என்றாலும் நாதுராம் கோட்சேவை இன்றளவும் இந்துத்துவவாதிகள் மாவீரராக கொண்டாடி வருகின்றனர்.
நாதுராம் கோட்சே 1949-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி தூக்கிலிடப்பட்டார். குஜராத், மத்தியபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நாதுராம் கோட்சேவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகளை இந்து சேனா, இந்து மகாசபை உள்ளிட்டவை நடத்தின.

குஜராத்தில் கோட்சே சிலை உடைப்பு
குஜராத்தில் இந்துத்துவ சிந்தனை வேர்பிடித்த இடம். அங்கு இந்து சேனா என்ற அமைப்பினர் கோட்சேவுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மேலும் குஜராத் ஜாம்நகரில் கோட்சேவுக்கு மார்பளவு சிலையையும் அமைத்தனர். இதனால் கொந்தளித்து போன காங்கிரஸ் தொண்டர்கள் இன்று காலை கோட்சே சிலையை உடைத்து நொறுக்கினர்.

தமிழகத்தில் கோட்சே வீரவணக்க நாள்
ஆனால் மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட போது இந்த நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயர் வைக்க சொன்ன நிலம் தமிழ்நாடு. அப்படி சொன்னவர் தந்தை பெரியார். ஆனால் இந்த நிலத்தில்தான் கோட்சேவின் வீரவணக்க நாளும் நடத்தப்பட்டிருக்கிறது.

திருப்பூர் சிவசேனா- கோட்சே ஆதரவு கோஷம்
திருப்பூரில் உள்ள சிவசேனா அலுவலகத்தில் யுவ சேனா சார்பில் கோட்சே நினைவுநாள் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டாது. அப்போது கோட்சேவை வாழ்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள் மிகவும் அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தொடரும் சர்ச்சை
அண்மையில் கேதார்நாத்தில் பிரதமர் மோடி ஆதி சங்கரர் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியை ஶ்ரீரங்கம் கோவிலில் திரையில் ஒளிபரப்பி, பாஜகவினரும் பங்கேற்றனர். இது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அறநிலையத்துறை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதா? என கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications