திருப்பூரில் கோடிகளை குவித்த தம்பதி.. வெறும் ஆறு வருடத்தில் அசுர வளர்ச்சி.. சிக்கியது எப்படி?
திருப்பூர்: திருப்பூர் குமார் நகரில் அதிக வட்டி தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாகக் கூறி 210-க்கும் மேற்பட்டவர்களிடம், ரூ.10 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக கணவன்-மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அதிக வட்டி தருவதாகக் கூறி செயல்படும் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிக வட்டி தருவதாக ஏமாற்றி பணத்தை முதலீடு செய்ய வைக்கும் நிதி நிறுவனங்கள் இன்றும் தமிழகத்தில் இயங்கி ஏமாற்றுகின்றன. சராசரியாக வங்கிகளால் தரமுடியாத வட்டியை ஒரு தனியார் நிறுவனம் தருகிறது என்று சொன்னால் நம்பக்கூடாது. வழக்கமாக வங்கிகள் ஆறு முதல் 8 சதவீதம் வட்டி தரும் நிலையில், திடீரென ஒரு நிறுவனம் மட்டும் 10 சதவீதம் வட்டி தருகிறேன், 12 சதவீதம் வட்டி தருகிறேன் என நடைமுறைக்கு சாத்தியமில்லாததை கூறினால் நம்பக்கூடாது. அதேபோல் நம்பவே முடியாத அளவிற்கு வட்டி, போனஸ், போன்றவற்றை தருவதாககூறி ஏமாற்ற முயன்றால் அதிலும் ஏமாறக்கூடாது. சிலர் பெயருக்கு சிலருக்கும் மட்டும் சரியாக கொடுப்பதுபோல் காட்டுவார்கள்.. ஒரு சில வருடங்களில் நிறைய பேர் பணம் போட்ட பிறகு ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆவார்கள்.. அப்படித்தான் ஒரு நிதி நிறுவனம் திருப்பூரில் சிக்கி உள்ளது.

மதுரையை சேர்ந்த முத்தையன் என்பவர், திருப்பூர் குமார் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் திருப்பூர் பி.என்.ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தார்.
இவருடைய ஆசை வார்த்தைகைளை நம்பி நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்தனர். பல லட்சம் ரூபாய்களை ஆனால் இவர்கள் அறிவித்தபடி வட்டியுடன் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே முத்தையன் திடீரென நிறுவனத்தை பூட்டி விட்டு தலைமறைவானார்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். துணை காவல் கண்காணிப்பாளர் முருகானந்தம் மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுமார், 210-க்கும் மேற்பட்டவர்களிடம், ரூ.10 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து முத்தையன், அவருடைய மனைவி மஞ்சு, மகன் கிரண்குமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் திருப்பூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முத்தையன் (48), மனைவி மஞ்சு (47), மகன் கிரண்குமார் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் 8.5 பவுன் தங்க பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே அதிக வட்டி தருவதாகக் கூறி செயல்படும் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்று திருப்பூர் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications