பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு.. திருப்பூர் திருமூர்த்தி மலை கோயிலுக்குள் புகுந்த வெள்ள நீர்
திருப்பூர்: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகக் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நல்ல மழை பெய்து வகுகிறது. இதற்கிடையே கனமழை கொட்டியதால் பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், இதனால் திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த பருவ மழை சீசன் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பல நீர்நிலைகளில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது.

மழை: கடந்த மாதம் இறுதியில் பெஞ்சல் புயல் ஏற்பட்ட நிலையில், அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முழுக்க பெஞ்சல் புயல் காரணமாகப் பாதிப்புகள் அதிகமாகவே இருந்தது. பெஞ்சல் புயல் காரணமாகத் திருப்பூர் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. கடந்த டிச. 4ம் தேதி இந்த தடை விதிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு வாரம் இது நீடித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த தடை நீக்கப்பட்டது. இதற்கிடையே கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் நேற்றைய தினம் நல்ல மழை பெய்தது.
ஏமாற்றம்: இந்த மழை காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளிக்க முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்தனர்.
கோயிலில் புகுந்த வெள்ளம்: இருப்பினும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை தொடர்ந்த நிலையில், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கூட நீர் புகுந்தது. இதையடுத்து அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கனமழை கொட்டும் நிலையில், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாகக் கோயிலிலும் நீர் அதிகளவில் நுழைந்தது. நேரம் செல்ல செல்ல தண்ணீரின் அளவு அதிகரித்த நிலையில், ஒரு கட்டத்தில் கன்னிமார் சிலைகள் வரை நீரில் மூழ்கியது. இதையடுத்து கோயிலுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். கோயிலுக்கு நீர் புகுந்த இந்த வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.

வானிலை மையம்: முன்னதாக நேற்றைய தினம் வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில் வானிலை மையம், "இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 16ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications