திருப்பூர் விடுதியில் நேற்று காலை டிஃபனால் அனைத்து சிறுவர்களுக்கும் காய்ச்சல்! காவல் துறை பகீர்
திருப்பூர்: திருப்பூர் விவேகானந்தா சேவாலயா விடுதியில் 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் நேற்று காலை சிற்றுண்டி சாப்பிட்ட மாணவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் என காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே விவேகானந்தா சேவாலயம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான விடுதி இயங்கி வருகிறது. இங்குள்ள சிறுவர்களுக்கு இன்று காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்கள் பலியாகிவிட்டனர். மேலும் 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
3 சிறுவர்களின் உயிரை குடித்த கெட்டுப்போன உணவு..பதற்றத்தில் திருப்பூர்.. கலெக்டர் விளக்கம்
கெட்டு போன உணவு
மாணவர்கள் கெட்டு போன உணவை சாப்பிட்டதால்தான் இறந்தனர் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறை ஆணையர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் விடுதி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவர்களுக்கு எந்த மாதிரியான உணவு வழங்கப்படுகிறது என கேட்டறிந்தார்.
உணவு சமைக்கும் இடம்
மேலும் உணவு சமைக்கப்படும் இடம், சாப்பிடும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக விடுதி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையர் பிரபாகரன் கூறுகையில் மாணவர்கள் தங்கியிருந்த காப்பகத்தை பார்வையிட்டோம். அதன் ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம்.
விடுதி நிர்வாகிகள்
விடுதி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியதில் நேற்று காலை மாணவர்களுக்கு இட்லி, சட்னி, வெண் பொங்கல், கொண்டைக் கடலை குழம்பு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட அனைத்து சிறுவர்களுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்ததால் நேற்று மதியம் வெறும் ரசம் சாதம் மட்டுமே வழங்கப்பட்டது.
ரசத்தை மட்டும் குடித்த குழந்தைகள்
ரசம் சாதத்தில் இருந்த ரசத்தை மட்டுமே குடித்த சிறுவர்கள், சாதத்தை கொட்டி விட்டனராம். காலை உணவை உட்கொண்டதால் சிறுவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதா என்பது குறித்து மருத்துவ அறிக்கைக்கு பின்னரே தெரியவரும். அது போல் அக்டோபர் 4 ஆம் தேதி பொரி, கடலை, சுண்டல், லட்டு ஆகியவை குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றார் பிரபாகரன்.