கரு பழனியப்பன் பேச்சால் அடிதடி.. திருப்பூர் ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் மீது தாக்குதல் - பரபரப்பு
திருப்பூர்: திருப்பூரில் நடக்கும் புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட இயக்குநர் கரு பழனியப்பன், காந்தியை ஆர்எஸ்எஸ் தான் கொன்ற பிறகு இந்தியாவை காந்தி நாடு என்று அறிவிக்க பெரியார் கூறினார் என்று பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன சுந்தரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்து அமைப்பினர், பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தில் இந்த புத்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருப்பூர் வேலன் ஹோட்டல் வளாகத்தில் புத்தக திருவிழா தொடங்கி உள்ளது. மொத்தம் 140 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக திருவிழா பிப்ரவரி மாதம் 2 ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் புத்தக திருவிழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று நடந்த புத்தக திருவிழாவில் திரைப்பட இயக்குநரும், பெரியார் பற்றாளருமான கரு பழனியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் புத்தக திருவிழாவில் பேசினார். அப்போது, காந்தியை ஆர்எஸ்எஸ் தான் கொன்றது. காந்தியை கொன்ற பிறகு இந்தியாவுக்கு காந்தி நாடு என்று பெயர் சூட்ட பெரியார் கோரிக்கை வைத்தார் என்று கூறினார்.
இதற்கு திருப்பூர் மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன சுந்தரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இன்னொரு தரப்பினர் மோகன சுந்தரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் உருவானது. அங்கிருந்த போலீசார் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தடுக்க முடியவில்லை.

இந்த வேளையில் ஒருவர் ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் மோகன சுந்தரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்பட பிற இந்து அமைப்பினர், பாஜகவினர் திரண்டு வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாவட்ட பாஜக தலைவர் செந்தில் வேல் உள்பட பலரும் அங்கு வந்தனர்.
ஆர்எஸ்எஸ் மாவட்ட தலைவர் மோகன சுந்தரத்தை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்.இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மோகன சுந்தரம் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் புத்தக திருவிழா நடக்கும் இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications